Arampannai ஜமாஅத் தலைவர் .
திரு .வைஸ் .கே.ஏ .முஹம்மது உதுமான்
பஞ்சாயத்துதலைவர்
திருமதி.ஹமிதாஹனிபா ;
கவுன்சிலர் .
திருமதி.சரிபாபசிர்

திங்கள், 31 அக்டோபர், 2011

டெண்டுல்கரா, யார் அவர்?


கட்டுரைகள்
டெண்டுல்கரா, யார் அவர்?

First Published : 01 Nov 2011 01:12:53 AM IST




கால்பந்து ஜாம்பவான்கள் பீலேவும், ரொனால்டோவும் நம் ஊர் சாலையில் நடந்து போனால்கூட யாருக்கும் அடையாளம் தெரியாது. கிறிஸ் எவர்ட், ஆர்தர் ஆஷ் ஆகியோரை யார் என்று கேட்பார்கள். ஃபார்முலா -1 என்றால் பிதாகரஸின் இன்னொரு சூத்திரம் என்று தப்புத் தப்பாகப் புரிந்து கொள்வார்கள்.
இவையெல்லாம் வெளிநாட்டு சங்கதிகள் என்பதால் நமக்குத் தெரியவில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வீரர்களை வரிசை மாறாமல் சொல்வதற்குக்கூட நமக்குத் தெரியும். யார் எதில் தேர்ந்தவர், என்னென்ன சாதனை புரிந்திருக்கிறார் என்பதெல்லாம்கூட நமக்கு அத்துப்படி. கிரிக்கெட் வீரர்கள் நின்றாலும் நடந்தாலும், செய்தியில் வந்துவிடுவார்கள்.
டெண்டுல்கர் என்றால் நமக்கு கடவுள். அவர் காயமடைந்து போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்னால், இளைஞர்களுக்கு வழி விடுகிறார் என்பார்கள். திடீரென அணியில் வந்து ஆடினால், கடினமான நேரத்தில் அணியைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று கதையை மாற்றுவார்கள்.
அவர் பல கோடி ரூபாயில் பழைய வீடு ஒன்றை வாங்கிக் குடியேறியதை பெரும்பாலான ஊடகங்களும் எழுதின. ஆனால் அதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் வீட்டில் குடியேறுவதற்கான சான்றைப் பெறவில்லை. அதற்கு சில லட்சங்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏற்கெனவே வெளிநாட்டில் இருந்து ஃபெராரி காரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து முறைகேடாக வரிவிலக்குக் கோரினார். இன்னொரு முறை, தாம் ஒரு கலைஞர் எனவும், அதற்காக வெளிநாடுகளில் கிடைக்கும் அன்னியச் செலாவணியில் தமக்கு விலக்குத் தர வேண்டும் எனவும் கேட்டார். இந்த நியாயமற்ற கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் சிலரும் ஆதரவாக இருந்தனர்.
வீட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விஷயத்திலும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஒருவர் டெண்டுல்கருக்கு ஆதரவாக மாநகராட்சியில் முறையிட்டார். நாட்டுக்காக அவர் நிறைய பெருமைகளைத் தேடித் தந்ததாகவும் வாதாடினார். ஆனாலும் அபராதம் விதிக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் இப்போது அபராதத்தைக் கட்டி அந்தச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது.
சச்சின் வீடு கட்டியதிலும் குடியேறியதிலும் யாருக்கும் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், கிரிக்கெட் வீரர் என்பதால் மட்டுமே அவரது சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுவதும், சலுகைகள் காட்ட முற்படுவதும்தான் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஒலிம்பிக் போட்டிகளிலும், பிற சர்வதேசப் போட்டிகளிலும் பதக்கங்களைக் குவிப்பவர்களை இந்த அளவுக்கு நாம் ஊக்குவிப்பதில்லை என்பது காலம்காலமாகக் கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டு. ஆனால் கிரிக்கெட் வாரியத்தின் அசுர பலத்தால் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தீர்வு காணப்படும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை.
மத்திய அரசு இயற்ற முயலும் விளையாட்டு மசோதா, தங்களுடைய எதேச்சதிகார நடைமுறைகளுக்குத் தடையாக இருக்கும் என்பதால் அந்த மசோதாவை கிரிக்கெட் வாரியத்தினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
ஊக்கமருந்து சோதனை உள்ளிட்ட உலக விளையாட்டுகளுக்கு விதிக்கப்படும் எந்தவிதமான சர்வதேச விதிமுறைகளையும் பின்பற்ற மாட்டோம் என்பதிலும் முரட்டுப் பிடிவாதமாக இருக்கின்றனர். பணபலமும், அரசியல் செல்வாக்கும் இதற்கு உடந்தையாக இருக்கின்றன.
கிரிக்கெட் மட்டும்தான் இந்தியர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு என்கிற தோற்றம் இருக்கிறது. உண்மை அதுவன்று. மற்ற எல்லா விளையாட்டுகளையும் முடக்குவதன் மூலம் நமது மக்களிடையே கிரிக்கெட் திணிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் சரி.
அதனால்தான் வெறும் 10 நாடுகளுக்கு மட்டுமே முழுமையாகத் தெரிந்த ஓர் ஆட்டத்தை வைத்துக் கொண்டு "உலக' கோப்பை போட்டிகளை நடத்துகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த அனைவரும் இந்த மாபெரும் பொய்யை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் உசுப்பேற்றி ஏமாற்றுவதுபோல வெளிநாட்டுக்காரர்களை ஏமாற்ற முடியவில்லை. அதனால்தான் எஃப் 1 போட்டிகளைப் பற்றி செய்தி சேகரிக்க வந்த வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கு, சச்சினைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அவர் யார், அவர் பின்னால் ஏன் இத்தனை கூட்டம், பெரிய பணக்காரரா என்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்காக இங்கிலாந்து சென்றபோதும் சச்சினுக்கு இதே கதிதான் நேர்ந்தது.
கிரிக்கெட்டில் சச்சின் மாபெரும் வீரர். ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்கிற வகையில் கிரிக்கெட்டை முழுமையாக ஆடத் தெரிந்த வெறும் 10 நாடுகளுக்குத்தான். உலகத்துக்கே அல்ல. இந்த விளையாட்டில் உலகக் கோப்பையை வென்றதாக நாம் பெருமைப்பட்டுக் கொள்வதைப் போன்ற அறியாமை வேறெதுவும் இருக்க முடியாது.
கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைத்திருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும் புகழும் பணமும் அவர்களது திறமையைவிடப் பல மடங்கு அதிகமானது. வேறு எல்லா விளையாட்டுகளையும் ஒழிப்பதாலும், ஊடகங்கள் உருவாக்கிய பிம்பங்களாலும் மட்டுமே அவர்களால் இந்திய இளைஞர்களுக்குக் கடவுளராக முடிந்திருக்கிறது. அந்த ஸ்பெயின் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி அந்த போலி பிம்பங்களை உடைத்திருக்கிறது.

சனி, 29 அக்டோபர், 2011

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...


 



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது. 

இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறியத் தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். 

சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. 



அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன். 

  • பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது. 
  • லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.  
  • இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார். 


இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.

அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ். 

அந்த கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தவும்.


1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London

இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது. 

வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று. 

ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால், அது, அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.

ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது? 

சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன். 

ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.      

குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation. 

மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன். 

என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன. 

ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".

நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்திபடுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.

அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.

படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.

என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா?........எங்களால் முடியாது"

என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"

நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.

காலப்போக்கில் என் கணவரால் குடும்பம் என்ற பொறுப்புக்குள் வர முடியவில்லை. ஏழு வருடங்களுக்கு பிறகு என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.

என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.

இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது. 

முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.

நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.  


2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey) 
Solicitor, 30, Bradford

நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"

நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை. 

2004ல், ஒரு மதிய நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். என் கழுத்தில் இருந்த சிறிய தங்க "ஏசு சிலுவையில் அறையப்பட்ட" செயினைப் பார்த்து அவர் கேட்டார், "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது போல?"

நான் அதனை மதத்திற்காக அணிந்திருக்கின்றேன் என்பதை காட்டிலும் பேஷனுக்காக தான் அணிந்திருந்தேன். "இல்லை நான் அப்படி நினைக்கவில்லை".

பிறகு அவர் தன்னுடைய நம்பிக்கையை பற்றி பேச ஆரம்பித்தார்.  

முதலில் நான் அவரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் என் மனதை துளைக்க ஆரம்பித்தன. சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.

லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது. 

எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"   

நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர். 

அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.

பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.     

சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன். 

"நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்". 

சிறிது நேரம் அமைதி...என் தாய் கூறினார். 

"நீ முஸ்லிமாக போகின்றாய், அப்படித்தானே?"

கண்ணீர் விட்டு அழுதார், கேள்விகளாய் கேட்டார். 

"திருமணமான பிறகு எப்படி இருப்பாய்? நீ இப்படி உடையணிந்து தான் ஆக வேண்டுமா? உன்னுடைய வேலை என்னவாகும்?. 

அவர் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டார். நான் அவரிடம் மறுபடியும் வாக்களித்தேன், நான் நானாகவே இருப்பேனென்று.

நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது. 

நான் இப்போது மிகுந்த மனநிறைவுடன் உள்ளேன்.  சில மாதங்களுக்கு முன், ஒரு முஸ்லிம் வழக்குரைஞருடன் எனக்கு திருமணம் நிச்சயமானது. அவருக்கு நான் வேலைக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதே நேரம் இஸ்லாமிய பார்வையிலான ஆண் பெண் பொறுப்புகளை ஆமோதிக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் என்னுடைய சுதந்திரத்தையும் விரும்புகின்றேன்.

நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை. 


அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....

பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.

டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து. 

"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டுக் கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.

ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். 

ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.

இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் படிக்க <<இங்கே>> சுட்டவும்....
Please note:
சகோதரிகளின் கருத்துக்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கப்படவில்லை. 

My Sincere Thanks to:
1. The Times.

Reference:

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
நன்றி ' உம்மத் 

வெள்ளி, 28 அக்டோபர், 2011

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!



நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்: டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. (ஊழல் விவகாரங்களின் வரிசையில் இன்னும் ஒரு விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது). காலை 11.30 மணிக்கு, 5 ஆயுதம் தாங்கிய மனிதர்கள் IED ( (உருவாக்கப்பட்ட வெடிக் கருவி) பொருத்தப்பட்ட வெள்ளை அம்பாசடர் காரை நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் வழியாக ஓட்டி வந்தார்கள். அவர்கள் தடுக்கப்பட்ட போது, காரிலிருந்து வெளியில் குதித்து சுட ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் அனைத்து போராளிகளும் கொல்லப்பட்டார்கள். கூடவே 8 பாதுகாப்புக் காவலர்களும், ஒரு தோட்டக்காரரும் கொல்லப்பட்டார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தை வெடித்துச் சிதற வைக்கும் அளவுக்கும், ஒரு படையணி முழுவதுமான சிப்பாய்களை எதிர்க்கும் அளவுக்கும் வெடி கருவிகளை வைத்திருந்தார்கள் என்று காவல் துறை சொன்னது. வழக்கமான மற்ற பயங்கரவாதிகளைப் போல இல்லாமல், இந்த ஐந்து பேரும் கணிசமான சாட்சியங்களை விட்டுச் சென்றார்கள். ஆயுதங்கள், மொபைல்கள், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், உலர்பழ பொதிகள் மற்றும் ஒரு காதல் கடிதம் கூட இவற்றில் அடங்கும்.
அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இதுதான் வாய்ப்பு என்று, மூன்று மாதங்களுக்கு முன்பு செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுடன் இந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டதில் நமக்கு வியப்பு ஏதுமில்லை.
தாக்குதல் நடந்த அடுத்த நாளே, டிசம்பர 14, 2001ம் தேதி, தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு இந்தச் சதியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் பலரை தேடிப் பிடித்து விட்டதாக கூறியது. அடுத்த நாளே, வழக்குக்குத் ‘தீர்வு கண்டு விட்டதாக’ அறிவித்தது: இந்தக் கூட்டுத் தாக்குதல் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கர் – எ -தொய்பா, ஜெய்ஷ் – எ – மொகமது என்று இரண்டு பயங்கரவாதக் குழுக்களின் கூட்டு நடவடிக்கை என்று போலீஸ் கூறியது. 12 பேர் இந்த சதியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டார்கள். ஜெய்ஷைச் சேர்ந்த காசி பாபா (வழக்கமான சந்தேக நபர் 1), ஜெய்ஷைச் சேர்ந்த மவுலானா மசூத் அசார் (வழக்கமாக சந்தேகப்பட வேண்டிய நபர் 2), தாரிக் அகமது (ஒரு ‘பாகிஸ்தானி’), கொல்லப்பட்ட ஐந்து ‘பாகிஸ்தானி பயங்கரவாதிகள்’ (அவர்கள் யார் என்று இன்று வரை நமக்குத் தெரியாது) கூடவே எஸ்ஏஆர், ஜீலானி, சவுகத் ஹுசைன் குரு, முகமது அப்சல் ஆகிய மூன்று காஷ்மீர் ஆண்களும், சவுக்கத்தின் மனைவி அப்சான் குருவும். இவர்கள் நான்கு பேரும்தான் கைது செய்யப்பட்டவர்கள்.
தொடர்ந்து வந்த பதற்றமான நாட்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 21ஆம் தேதி, பாகிஸ்தானில் இருக்கும் தனது தூதுவரை இந்தியா- திரும்பப் பெற்றதோடு, வான் வழி, ரயில், மற்றும் பேருந்து தொடர்புகளை துண்டித்து, விமானங்கள் பறப்பதை தடை செய்தது. தனது போர் எந்திரத்தை பெரும் அளவில் திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்து, 5 லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களை பாகிஸ்தான் எல்லைக்கு நகர்த்தியது. வெளிநாட்டு தூதரகங்கள் தமது ஊழியர்களையும் குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பின. இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு எச்சரிக்கைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. துணைக்கண்டம் அணு ஆயுதப் போரின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்பட்டதை உலகம் திகைப்புடன் கவனித்துக் கொண்டிருந்தது. (இதற்கு எல்லாம் இந்திய மக்களின் வரிப்பணமான ரூ.10,000 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டது. கலவர முறையில் செய்யப்பட்ட படை திரட்டலின் போது மட்டும் சில நூறு படை வீரர்கள் உயிரிழந்தார்கள்).
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்டு 4, 2005ல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. நாடாளுமன்றத் தாக்குதல் ஒரு போர் நடவடிக்கை என்று கருதப்பட வேண்டும் என்ற கருத்தை அது ஏற்றுக் கொண்டது. ‘நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் முயற்சி இந்திய அரசாங்கம் உள்ளிட்ட அரசின் இறையாண்மை நலனை மீறுவதாக இருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உறுதியான இந்திய எதிர்ப்பு உணர்வால் செலுத்தப்பட்டிருக்கிறார்கள். காரில் ஒட்டப்பட்டிருந்த போலி உள்துறை ஸ்டிக்கரில் (சாட்சியம் PW1/8) இருந்த வாக்கியங்கள் அதை வெளிப்படுத்துகின்றன’ என்று அது சொன்னது. ‘தீவிரமான இந்த தற்கொலைப்படையினரின் செயல்முறை இந்திய அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது’ என்று தொடர்ந்து விளக்கியது.
போலி உள்துறை அமைச்சக ஸ்டிக்கரில் எழுதப்பட்டிருந்த உரை இதுதான்:
‘INDIA IS A VERY BAD COUNTRY AND WE HATE INDIA WE WANT TO DESTROY INDIA AND WITH THE GRACE OF GOD WE WILL DO IT GOD IS WITH US AND WE WILL TRY OUR BEST. THIS EDIET WAJPAI AND ADVANI WE WILL KILL THEM. THEY HAVE KILLED MANY INNOCENT PEOPLE AND THEY ARE VERY BAD PERSONS THERE BROTHER BUSH IS ALSO A VERY BAD PERSON HE WILL BE NEXT TARGET HE IS ALSO THE KILLER OF INNOCENT PEOPLE HE HAVE TO DIE AND WE WILL DO IT’.
மிகவும் அடக்கமான சொற்களில் எழுதப்பட்ட அந்த ஸ்டிக்கர் அறிக்கை, நாடாளுமன்றத்திற்குள் வந்த காரின் முன் புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது. (இவ்வளவு எழுதியிருப்பதைப் பார்க்கும் போது ஓட்டுனர் சாலையை எப்படி பார்த்து வண்டி ஓட்டியிருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. அதனால்தான் துணை குடியரசுத் தலைவரின் வாகன வரிசையுடன் மோதினாரோ என்னவோ?)
காவல்துறையின் குற்றப்பத்திரிகை, பொடா (பயங்கரவாத தடுப்பு சட்டம்) சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம், ஜீலானி, சவுகத் மற்றும் அப்சலுக்கு மரண தண்டனை விதித்தது. அப்சான் குருவுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உயர்நீதி மன்றம் ஜீலானியும் அப்சானும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து, சவுகத் மற்றும் அப்சலுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது. இறுதியாக, உச்ச நீதிமன்றம் குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை உறுதி செய்து, சவுகத்தின் தண்டனையை 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை என்று குறைத்தது. ஆனால், அது அப்சலின் தண்டனையை உறுதி செய்ததோடு மட்டுமில்லாமல் அதிகரிக்கவும் செய்தது. அவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும் ஒரு இரட்டை மரண தண்டனையும் விதிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம் அதன் ஆகஸ்டு 4, 2005 தீர்ப்பில், அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அது இப்படியும் சொல்கிறது. ‘பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது’.
ஆகவே, நேரடி சாட்சியம் இல்லை, ஆனால், சூழ்நிலை சாட்சியங்கள் உண்டு.
தீர்ப்பின் சர்ச்சைக்குள்ளான ஒரு பத்தியில், ‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சவாலாக இருந்த இந்த பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களின் செயலுக்கு பரிகாரம் இந்த துரோகச் செயலில் சதிகாரர் என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிகபட்ச தண்டனையை அளிப்பதாகத்தான் இருக்க முடியும்’. (அழுத்தம் என்னுடையது).
மரண தண்டனை என்னும் சடங்கு ரீதியான கொலையை நியாயப்படுத்துவதற்கு ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை’ பயன்படுத்துவது லைஞ்ச் சட்டத்தை (ஒரு கும்பல் சட்ட விரோதமாக கொலை செய்வது – மொழிக் குறிப்பு) போற்றுவதற்கு சமமானது. இதை நம் மீது சுமத்தியவர்கள் கொலைப்பசி கொண்ட அரசியல்வாதிகளோ, பரபரப்பைத் தேடும் பத்திரிகையாளர்களோ இல்லை (அவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள்). ஆனால், நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாக இது வந்தது நடுக்கமூட்டுவதாக இருக்கிறது.
‘சரணடைந்த போராளியான மனுதாரர் தேசத்துக்கு எதிரான துரோகச் செயல்களை தொடர்ந்து செய்வதில் முனைந்து நிற்கிறார். அவர் சமூகத்துக்கு ஒரு அச்சுறுத்தல். அவரது உயிர் இல்லாமல் போக வேண்டும்’ என்று அப்சலுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான காரணங்களை விளக்கும் வகையாக தீர்ப்பு தொடர்ந்து சொல்கிறது.
இந்த பகுதி தவறான வாதத்தையும், இன்றைய காஷ்மீரில் ‘சரணடைந்த போராளி’யாக இருப்பதைப் பற்றிய அறிவின்மையையும் இணைக்கிறது.
எனவே: முகமது அப்சலின் உயிர் இல்லாமல் போக வேண்டுமா?
அறிவுஜீவிகள், பத்திரிகை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுவாழ்க்கையினர் அடங்கிய சிறிய, செல்வாக்கு மிகுந்த ஒரு சிறுபான்மையினர் மரண தண்டனையை கொள்கை ரீதியாக எதிர்த்தனர். மரண தண்டனை பயங்கரவாதிகளுக்கு ஒரு மனத்தடையாக இருக்கிறது என்பதற்கு எந்த நடைமுறை ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். (தற்கொலை மனித வெடி குண்டுகளின் இந்தக் காலத்தில், மரணம் ஒரு முக்கிய கவர்ச்சியாக இருக்கும் போது, அப்படி இல்லைதான்).
கருத்துக் கணிப்புகள், ஆசிரியருக்குக் கடிதம், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பங்கு பெறும் பார்வையாளர்கள் இவர்கள்தான் இந்திய பொதுக்கருத்தின் சரியான அளவை என்று வைத்துக் கொண்டால், லைஞ்ச் கும்பல் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே போகிறது. அறுதிப் பெரும்பான்மை இந்திய குடிமக்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு அப்சல் குரு ஒவ்வொரு நாளும், சனி, ஞாயிறு கூட விடுமுறை விடாமல், தூக்கில் இடப்பட வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, ஒரு கணமும் தாமதிக்காமல் அவர் உடனடியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று அநாகரீகமான அவசரத்தைக் காட்டுகிறார்.
இதற்கிடையில், காஷ்மீரில் பொதுக்கருத்து இதே பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. கோபமான மக்கள் போராட்டங்கள், அப்சல் தூக்கிலிடப்பட்டால் பின்விளைவுகள் அரசியல் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெளிவாக்குகின்றன. நீதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சிலர் போராடுகிறார்கள், ஆனால், இந்திய நீதிமன்றங்களிடமிருந்து நியாயம் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு கொடுமைகளுக்கிடையில் வாழ்ந்து அனுபவித்து விட்ட அந்த மக்களுக்கு நீதிமன்றங்கள், மனுக்கள், அல்லது நீதி மீது எந்த நம்பிக்கையும் மிஞ்சியிருக்கவில்லை. இன்னும் சிலர், முகமது அப்சல், மக்பூல் பட்டைப் போல தூக்கு மேடைக்கு கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்க்க விரும்புகிறார்கள். காஷ்மீரின் விடுதலைப் போராட்டத்திற்காக பெருமை மிகு தியாகியாக மாறுவதை விரும்புகிறார்கள். மொத்தத்தில், பெரும்பான்மை காஷ்மீரிகள் அப்சல் ஆக்கிரமிப்பு சக்தியின் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் ஒரு போர்க்கைதி என்றே கருதப்படுகிறார். (அது சந்தேகத்துக்கிடமில்லாத உண்மை). நிகழ்வுகளின் போக்கை மோப்பம் பிடித்து விட்ட அரசியல் கட்சிகள், காஷ்மீரிலும் சரி, இந்தியாவிலும் சரி, கொலை செய்வதற்காக வட்டமிட ஆரம்பித்து விட்டன.

இந்த பரபரப்புகளுக்கிடையே ஒரு தனி நபராக, உண்மையான மனிதனாக வாழ்வதற்கான உரிமையை அப்சல் விட்டுக் கொடுத்து விட்டது போலத் தோன்றுவது வருத்தப்பட வேண்டிய ஒன்று. தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், மரணதண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் கற்பனைக்கும் அவர் வாகனமாக மாறியிருக்கிறார். அவர் இந்தியாவின் மாபெரும் வில்லனாகவும் காஷ்மீரின் மாபெரும் ஹீரோவாகவும் ஆகி விட்டார். நமது நிபுணர்கள், கொள்கை வகுப்பவர்கள், அமைதி குருக்கள் என்ன சொன்னாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், காஷ்மீரில் நடக்கும் போர் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது.
அச்சம் சூழ்ந்த அரசியல் மயமாக்கப்பட்ட இத்தகைய சூழலில், தலையிட வேண்டிய கட்டம் வந்தது, கடந்து போய் விட்டது என்று விட்டு விடலாம் என்றுதான் தோன்றுகிறது. கடைசியில் பார்க்கும் போது, நீதி விசாரணை 40 மாதங்களுக்கு மேல் நீடித்தது, உச்ச நீதிமன்றம் தனக்கு முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை பரீசிலித்திருக்கிறது. இரண்டு பேரின் குற்றத்தை உறுதி செய்து, இரண்டு பேரை விடுதலை செய்தது. நிச்சயமாக இதுவே நீதித்துறையின் நடுநிலைமைக்கு சான்றாக இருக்கிறதுதானே? விவாதிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். அரசுத் தரப்பின் வழக்கு, ஒரு பாதியில் பச்சைத் தவறாகவும் இன்னொரு பாதியில் சிறப்பான வெற்றியாகவும் இருப்பது வியப்பாக இல்லை?
முகமது அப்சல், மக்பூல் பட்டாக இல்லாமல் இருப்பதாலேயே அவரது கதை இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது. இருப்பினும், அவரது கதை காஷ்மீர் பள்ளத்தாக்கின் வரலாற்றுடன் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளது. இந்தக் கதையின் எல்லைகள், நீதிமன்ற வட்டங்களையும், தன்னைத் தானே ‘வல்லரசாக’ அறிவித்துக் கொண்டுள்ள நாட்டின் பாதுகாப்பான மையத்தில் வசிக்கும் மக்களின் உள்ளங்களையும் தாண்டி விரிகின்றன. முகமது அப்சலின் கதை, இயல்பான நீதியுணர்வின் வாதங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போர் பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது.
இந்த எல்லாக் காரணங்களையும் கருத்தில் கொண்டு, டிசம்பர் 13 நாடாளுமன்ற தாக்குதல் என்ற வினோதமான, வருந்தத்தக்க, மர்மமான கதையை கவனமாக பரிசீலிக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய ‘மக்களாட்சி’ உண்மையில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி அது நிறைய நமக்குச் சொல்கிறது. மாபெரும் நிகழ்வுகளை மிகச் சிறு நிகழ்ச்சிகளுடன் அது இணைக்கிறது. காவல் நிலையங்களின் இருள் படிந்த மூலைகளில் நடப்பவற்றையும் குளிர் நிறைந்த பனி படிந்த சொர்க்க பள்ளத்தாக்கின் தெருக்களில் நடந்து கொண்டிருப்பவற்றையும், நாடுகளை அணுஆயுதப் போரின் விளிம்புகளுக்குக் கொண்டு வரும் மனிதநலன்களுக்கு அப்பாற்பட்ட தீய ஆவேசத்தையும் இணைக்கும் பாதைகளை அது காட்டுகிறது. அது எழுப்பும் குறிப்பான கேள்விகளுக்கு தேவை குறிப்பான பதில்கள், தத்துவரீதியான அல்லது விவாதரீதியான பதில்கள் இல்லை. கேள்விக்குரியதாக இருப்பது ஒரு தனிமனிதனின் விதி மட்டுமில்லை.
இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, முகமது அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து புதுதில்லி ஜந்தர் மந்தரில் கூடிய ஒரு சிறு குழுவில் நானும் இருந்தேன். முகமது அப்சல் ஒரு பயங்கரமான திட்டத்தின் ஒரு சிறு பொம்மைதான் என்று நம்பியதால் நான் அங்கு போயிருந்தேன். சித்தரிக்கப்படுவதைப் போன்று அவர் ஒரு டிராகன் இல்லை, அந்த டிராகனின் காலடிச் சுவடுதான் அவர். காலடிச் சுவடை இல்லாமல் செய்து விட்டால், உண்மையில் டிராகனாக இருந்தது யார் என்பது தெரியாமலேயே போய் விடும். இப்போதைய டிராகனும் வெளிவராது.
அந்த பிற்பகலில் போராட்டக்காரர்களை விட பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் அதிகமாக இருந்ததில் வியப்பில்லை. அப்சலின் குட்டிப் பையன் காலிப் மீதுதான் பெரும் கவனம் குவிந்திருந்தது. தந்தை தூக்குமேடைக்கு அனுப்பப்படும் நிலையிலிருக்கும் சிறுபையனிடம் எப்படி பழகுவது என்று புரியாமல், கருணை மனம் படைத்தவர்கள் ஐஸ்கிரீம்களையும், குளிர்பானங்களையும் வாங்கித் திணித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்தவர்களைச் சுற்றிப் பார்த்த போது ஒரு சோகமான உண்மையைக் கவனித்தேன்.
அந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த, பேச்சாளர்களை அறிமுகம் செய்து அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த குள்ளமான குண்டான மனிதர் தில்லி பல்கலைக் கழகத்தில் அரபி இலக்கியத் துறையின் இளம் விரிவுரையாளர். எஸ்ஏஆர் ஜீலானி. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூன்றாவது குற்றவாளி. தாக்குதல் நடந்த அடுத்த நாள் டிசம்பர் 14, 2001ல் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். காவல்துறை பாதுகாப்பில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரது மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்ட போதும் அவர் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ள மறுத்தார். அவரது கைதைத் தொடர்ந்த நாட்களில் செய்தித் தாள்களைப் படித்திருந்தால் இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்காது. இல்லாத, கற்பனையான வாக்குமூலங்களைப் பற்றிய விபரங்களை அவை வெளியிட்டன. சதிக்கான இந்திய பகுதியின் கொடூர மூளை ஜீலானி என்று தில்லி காவல்துறை சித்தரித்தது. அதன் கதாசிரியர்கள் ஜீலானிக்கு எதிராக வெறுப்பு நிறைந்த ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினார்கள். அதிதேசியவாத, பரபரப்பு தேடும் ஊடகங்கள் அதை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டன. குற்ற வழக்கு விசாரணைகளில், நீதிபதிகள், ஊடகச் செய்திகளை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காவல் துறைக்கு நன்றாகவே தெரியும். எனினும், இந்த ‘பயங்கரவாதிகளுக்காக’ அவர்கள் உருவாக்கிய ஈவு இரக்கமற்ற சித்திரம் பொதுக் கருத்தை உருவாக்கி வழக்கு விசாரணைக்கு அவர்கள் விரும்பும் சூழலை உருவாக்கும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், அவர்களது நடவடிக்கைகள் எவையும் சட்டரீதியான பரீசிலனைக்கு உட்படப் போவதில்லை.
முன்னணி பத்திரிகைகளில் வெளியான கேவலமான, வெளிப்படையான பொய்களில் சில கீழே:
 ’வழக்கு முடிவுக்கு வந்ததுதாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ்’,
தி இந்துஸ்தான் டைம்ஸ், டிச 15, 2001: நீத்தா சர்மா மற்றும் அருண் ஜோஷி.
‘ஜாகிர் உசைன் கல்லூரி(மாலை)யின் அரபி பேராசிரியரை சிறப்புப் பிரிவு காவலர்கள் கைது செய்தார்கள். போராளிகள் தமது செல்போனிலிருந்து அவரது தொலைபேசியை அழைத்தது நிரூபணமாகியிருக்கிறது’. அதே நாளிதழில் இன்னொரு செய்தி: ‘தாக்குதலுக்கு முன்னதாக பயங்கரவாதிகள் அவருடன் பேசினார்கள். தாக்குதலுக்குப் பிறகு பேராசிரியர் பாகிஸ்தானுக்கு தொலைபேசினார்’.
தில்லி பல்கலை ஆசிரியர் பயங்கரவாத திட்டத்தின் மையம்’ 
தி டைம்ஸ் ஆப் இந்தியா, டிச 17, 2001.
‘நாடாளுமன்றத்தின் மீது டிசம்பர் 13 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஜெய்ஷ் – எ – முகமது மற்றும் லஷ்கர் – எ – தொய்பா பயங்கரவாத குழுக்களின் கூட்டு நடவடிக்கையாகும். அதில் தில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சையத் ஏஆர் ஜீலானி ஒரு முக்கிய ஒருங்கிணைப்பாளர் என்று தில்லி காவல்துறை ஆணையாளர் அஜய்ராஜ் ஷர்மா ஞாயிற்றுக் கிழமை சொன்னார்’.
பல்கலை தாதா தற்கொலைப்படைக்கு வழிகாட்டினார்
தி ஹிந்து, டிச 17, 2001: தேவேஷ் கே பாண்டே
‘விசாரணையின் போது, ஜீலானி, ‘தற்கொலை’ தாக்குதல் திட்டமிடப்பட்ட நாளிலிருந்தே சதியைப் பற்றி அவருக்குத் தெரிந்தததாக சொன்னார்.
தாதா ஓய்வு நேரத்தில் பயங்கரவாதத்தில் உரை நடத்தினார்’ 
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 17, 2001: சுதிர்தோ பட்ரனோபிஸ்.
‘அவர் மாலையில் கல்லூரியில் அரபி இலக்கியம் கற்றுக் கொடுத்தார். ஓய்வு நேரத்தில் தனது வீட்டில் அல்லது கைது செய்யப்பட்ட இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவரான சவுகத் ஹூசைனின் வீட்டில் மூடிய கதவுகளுக்குப் பின்பு பயங்கரவாதத்தில் பாடங்கள் நடத்தினார் என்பது விசாரணைகளில் தெரிய வந்தது’.
பேராசிரியரின் நடவடிக்கைகள்
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 17, 2001.
‘சமீபத்தில் ஜீலானி மேற்கு தில்லியில் 22 லட்ச ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார். இப்படி ஒரு புதையல் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தில்லி காவல் துறை விசாரித்து வருகிறது’.
அலிகர் சே இங்கிலாந்து தக் சாட்ரோன் மே ஆதங்க்வாத் கே பீஜ் போரஹா ஜீலானி
(அலிகரிலிருந்து இங்கிலாந்து வரை ஜீலானி பயங்கரவாதத்தின்விதைகளை விதைத்தார் ) ராஷ்ட்ரிய சகாராடிச 18, 2001: சுஜித் தாகூர்
மொழிபெயர்ப்பு: ‘…தகவல் தருபவர்கள் மற்றும் புலன்விசாரணை துறைகள் சேகரித்த விபரங்களின் படி, அவர் ஜெய்ஷ் – எ – முகமது அமைப்பின் உளவாளியாக நீண்ட காலம் செயல்பட்டதாக ஜீலானி சொல்லியிருந்தார். ஜீலானியின் பேச்சு வன்மை, பணி முறை, சரியான திட்டமிடல் இவற்றைக் கருத்தில் கொண்டு அவரிடம் கருத்துரீதியான பயங்கரவாதத்தை பரப்பும் பொறுப்பை 2000ம் ஆண்டில் ஜெய்ஷ் – எ – முகமது ஒப்படைத்தது.
பயங்கரவாதி என கருதப்படுபவர் பாகிஸ்தான் தூதரகத்துக்குஅடிக்கடி போகின்றவர்’. 
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 21, 2011: ஸ்வாதி சதுர்வேதி
‘விசாரணையின் போது, தான் அடிக்கடி பாகிஸ்தானுக்கு தொலைபேசியதாகவும், ஜெய்ஷ் – எ – முகமது இயக்க போராளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஒத்துக் கொண்டார்… ஜெய்ஷ் உறுப்பினர்களில் சிலர் பணம் கொடுத்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு அடுக்கு வீடுகளை வாங்குமாறு சொன்னார்கள் என்று தெரிவித்தார்’.
இந்த வார நாயகன்
சண்டே டைம்ஸ் ஆப் இந்தியா, டிச 23, 2001:
‘ஒரு செல்பேசிதான் அவருக்கு உலை வைத்தது. தில்லி பல்கலைக்கழகத்தின் சையத் ஏஆர் ஜீலானிதான் டிசம்பர் 13 வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர். பயங்கரவாதத்தின் வேர்கள் எவ்வளவு தூரம் எவ்வளவு ஆழமாக பரவியிருக்கின்றன என்பதை இந்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளிப்படுத்துகிறது…’
ஜீ டிவி எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.
‘காவல்துறை குற்றப்பத்திரிகை அடிப்படையிலான உண்மை’ (முரண் சொற்றொடர் என்றுதானே தோன்றுகிறது?) என்று சொல்லி டிசம்பர் 13 என்ற ஒரு ஆவணநாடகத்தை தயாரித்தது. இந்தப் படம் பிரதமர் வாஜ்பாயிக்கும் உள்துறை அமைச்சர் எல்கே அத்வானிக்கும் தனியாக திரையிட்டுக் காட்டப்பட்டது. இரண்டு பேருமே படத்தை பாராட்டினார்கள். அவர்களது பாராட்டு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளியிடப்பட்டது
இந்த குறும்படத்தை திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதிகள், ஊடகங்களால் பாதிக்கப்படுவதில்லை என்று காரணம் சொல்லப்பட்டிருந்தது. (நீதிபதிகள் ஊடக செய்திகளால் பாதிக்கப்படா விட்டாலும், சமூகத்தின் கூட்டு மனசாட்சி பாதிக்கப்படலாம் என்பதை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொள்ளுமா?) ஜீலானி, அப்சல், மற்றும் சவுகத்துக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு டிசம்பர் 13 ஜீ டிவியின் தேசிய ஓடையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மொத்தத்தில் ஜீலானி 18 மாதங்கள் சிறையில் கழித்தார். அவற்றில் பெரும்பகுதி தனிமைச் சிறையில் கழித்தார்.
உயர் நீதிமன்றம் அவரையும் அப்சான் குருவையும் குற்றமற்றவர்கள் என்று தீர்மானித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். (கைது செய்யப்படும் போது கர்ப்பமாயிருந்த அப்சான் சிறையில் குழந்தை பெற்றார். அந்த அனுபவம் அவரை உடைத்து விட்டது. அவர் இப்போது கடுமையான மனநோய் பாதிப்பில் இருக்கிறார்). உச்சநீதி மன்றம் இந்த விடுதலையை உறுதி செய்தது. ஜீலானியை நாடாளுமன்ற தாக்குதல் அல்லது ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் இணைக்கும் எந்த சாட்சியத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை.
எந்த ஒரு செய்தித்தாளோ பத்திரிகையாளரோ தொலைக்காட்சிஓடையோ தமது பொய்களுக்காக ஜீலானியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் எஸ்ஏஆர் ஜீலானிக்கு அத்தோடு தொல்லைகள் விட்டு விடவில்லை. அவர் விடுவிக்கப்பட்ட பிறகு சிறப்பு பிரிவின் கையில் மிஞ்சி இருந்தது ‘சூத்திரதாரி’ இல்லாத ஒரு கதைக்கரு மட்டும்தான். இது எப்படி ஒரு விவகாரமாக மாறியது என்று பார்ப்போம். முக்கியமாக, ஜீலானி இப்போது சுதந்திரமாக உலாவுகிறார். ஊடகங்களை அணுகவும், வழக்கறிஞர்களுடன் விவாதிக்கவும், தனது கெட்ட பெயரை சரிப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு நாள், பிப்ரவரி 8, 2005 அன்று மாலையில் ஜீலானி வழக்கறிஞரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். ஒரு மர்ம மனிதன் இருட்டிலிருந்து வெளிப்பட்டு அவரை நோக்கி 5 குண்டுகளை சுட்டான். அதிசயமாக, அவர் பிழைத்துக் கொண்டார். இந்தக் கதையில் நம்ப முடியாத புதிய திருப்பமாக இது இருந்தது. அவருக்குத் தெரிந்தவற்றைப் பற்றி அல்லது அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று யாருக்கோ பயம் இருந்திருக்கிறது. காவல் துறையினர் இதைப் பற்றிய விசாரணைக்கு முன்னிலை கொடுத்து நடத்துவார்கள் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் புதிய கோணங்களுக்கு இது இட்டுச் செல்லும் என்ற நோக்கத்தில் அதை செய்திருக்க வேண்டும். மாறாக, ஜீலானியின் மீதான கொலைத்தாக்குதல் விசாரணையில் அவரையே குற்றவாளி போல நடத்தியது சிறப்புப் பிரிவு. அவரது கணினியை பறிமுதல் செய்து காரையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். மருத்துவமனைக்கு வெளியில் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் கூடி தாக்குதல் பற்றி விசாரணை நடத்தும் படி கோரினார்கள். அத்தகைய விசாரணையில் சிறப்புப் பிரிவின் செயல்பாடும் பரிசீலனைக்கு வரும். (எதிர்பார்த்தபடியே, அது நடக்கவே இல்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகும் அதைப் பற்றி விசாரணை நடத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. விசித்திரம்!)
கடைசியில் அந்தக் கொடுமையான அனுபவத்தைக் கடந்து வந்த எஸ்ஏஆர் ஜீலானி இங்கே ஜந்தர் மந்தரில் பொது இடத்தில் நின்று முகமது அப்சலுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது சரியில்லை என்று பிரச்சாரம் செய்கிறார். எந்தத் தொல்லையும் இல்லாமல் வீட்டில் அமைதியாக இருந்திருக்கலாம். அமைதியான முறையில் வெளியான அவரது தைரியம் என்னை மிகவும் பாதித்தது.
எஸ் ஆ ஆர் ஜீலானிக்கு அப்பால், நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் காரர்களுக்கு நடுவில் இன்னொரு ஜீலானி எலுமிச்சை நிற டி – சட்டையில் யாரும் கவனித்து விடக் கூடாது என்ற கூச்சத்துடன் கையில் ஒலிப்பதிவுக் கருவியுடன் நின்று கொண்டிருந்தார். இப்திகார் ஜீலானி. அவரும் சிறைக்குப் போயிருந்தார். ஜூன் 9, 2002 அன்று கைது செய்யப்பட்டு போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஜம்முவில் இருந்து இயங்கும் காஷ்மீர்டைம்ஸ் நாளிதழில் நிருபராக இருந்தார். அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ‘இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில்’ இந்திய படைகளின் நகர்வுகளைப் பற்றிய காலாவதி ஆன தகவல்களை அவர் வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. (இந்த தகவல் பாகிஸ்தானிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றினால் இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்ததும், யார் வேண்டுமானாலும் அதை தகவிறக்கிக் கொள்ள முடியும் என்பதும் பின்னர் தெரிய வந்தது). இப்திகார் ஜீலானியின் கணினி பறிமுதல் செய்யப்பட்டது. ஐபி அதிகாரிகள் அவரது ஹார்ட் டிரைவை குடைந்து, தகவிறக்கப்பட்ட கோப்பில் புகுந்து ‘இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர்’ என்ற சொற்களை ‘ஜம்மு கஷ்மீர்’ என்று மாற்றினார்கள். அப்போதுதான் அது இந்திய ஆவணம் போல இருக்கும், கூடவே ‘தகவலுக்கு மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு இல்லை’, என்ற சொற்களையும் சேர்த்து உள்துறை அமைச்சகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ஆவணம் போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். இது பற்றி இப்திகார் ஜீலானியின் வழக்கறிஞர் பல முறை விளக்கம் கேட்டும் கட்டுரையின் நகல் அதனிடம் கொடுக்கப்பட்டிருந்தும் ராணுவ உளவுத் துறையின் தலைமை இயக்ககம் ஆறு மாதம் வரை விளக்கம் அளிக்க மறுத்தது.
சிறப்புப் பிரிவு சொன்ன கொடூரமான பொய்கள் நாளிதழ்களில் பணிவுடன் வெளியிடப்பட்டன. சொல்லப்பட்ட பொய்களில் சில:
 ’ஹூரியத் தீவிரவாதி சையத் ஷா ஜீலானியின் 35 வயது மருமகன்இப்திகார் ஜீலானிதான் ஒரு பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின்ஊழியர் என்று ஒரு மாநகர நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டதாகநம்பப்படுகிறது’ – 
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜூன் 11, 2002: நீத்தா ஷர்மா
‘இப்திகார் ஜீலானிதான் ஹிஜ்புல் முஜாஹிதீனின் சையத் சலாஹூதீனின் தொடர்பாளர் இந்திய உளவு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை இப்திகார் சலாஹூதீனுக்கு கொடுப்பது வழக்கம் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவர் தனது உண்மையான நோக்கங்களை தனது பத்திரிகையாளர் போர்வைக்குப் பின் மறைத்துக் கொண்டதால், அவரது முகமூடியை விலக்கி உண்மையை அறிய பல ஆண்டுகள் பிடித்தன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன’.- தி பயனீர், பிரமோத் குமார் சிங்
ஜீலானி கே தமாத் கே கர் ஆய்கர் சாப்போன் மேம் பெஹிசாப்சம்பத்தி வா சமாவாய்தான்ஷெயில் தஸ்தாவேஜ் பர்மாத்
(ஜீலானியின் மருமகன் வீட்டிலிருந்து வருமான வரி ரெய்டின் போது பெரும் அளவிலான செல்வங்களும், ரகசிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன) – ஹிந்துஸ்தான், ஜூன் 10, 2002
அவர் வீட்டிலிருந்து 3,450 ரூபாய்தான் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையின் குற்றப்பத்திரிகை பதிவு செய்திருப்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.
இதற்கிடையில், அவருக்கு மூன்று படுக்கையறை கொண்ட பிளாட் சொந்தமாக இருப்பதாகவும், மறைக்கப்பட்ட 22 லட்ச ரூபாய் வருமானம் இருப்பதாகவும், 70 லட்சம் ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவதை தவிர்க்க தலைமறைவாகி விட்டார்கள் என்றும் மற்ற செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் கைது செய்யப்பட்டிருந்துது என்னவோ உண்மை. சிறையில் இப்திகார் ஜீலானி அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார். கழிவறையை தனது சட்டையால் துடைக்க வைத்து விட்டு, அதே சட்டையை பல நாட்கள் அணிய வைக்கப்பட்டதைப் பற்றி ‘சிறையில் எனது நாட்கள்’ என்ற புத்தகத்தில் சொல்கிறார். ஆறு மாத நீதிமன்ற வாதங்கள், அவருடன் பணி புரிபவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, அவருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடந்தால் பெரிய அவமானத்துக்கு உள்ளாக நேரிடும் என்று தெளிவான பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
அவரும் இப்போது இங்கே வந்திருக்கிறார். ஒரு சுதந்திர மனிதனாக, ஒரு பத்திரிகையாளராக ஜந்தர் மந்தரில் நிகழ்வைப் பற்றி எழுத வந்திருக்கிறார். எஸ்ஏஆர் ஜீலானி, இப்திகார் ஜீலானி, முகமது அப்சல் மூன்று பேரும் ஒரே நேரத்தில் திகார் சிறையில் இருந்தார்கள் என்பது எனக்கு உறைத்தது. (இன்னும் பல டசன் காஷ்மீரிகளும் அவர்களுடன் இருந்தார்கள். அவர்களது கதைகளெல்லாம் நமக்குத் தெரியாமலேயே போய் விடலாம்)
எஸ்ஏஆர் ஜீலானி, இப்திகார் ஜீலானி இவர்களின் மீதான வழக்குகள் இந்திய நீதித் துறையின் நேர்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும், தனது தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் அதன் திறனையும் காட்டுகிறது என்றும் அதன் நம்பகத்தன்மையை குறைக்கவில்லை என்றும் ஒருவர் சொல்லலாம். அது ஓரளவுக்குத்தான் உண்மை.
இப்திகார் ஜீலானியும், எஸ்ஏஆர் ஜீலானியும் இரண்டு பேருமே தில்லியைச் சேர்ந்த காஷ்மீரிகள். போராட்ட குணமுடைய நடுத்தர வர்க்க நண்பர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக் கழக ஆசிரியர்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு திரண்டு வந்தார்கள். எஸ்ஏஆர் ஜீலானியின் வழக்கறிஞர் நந்திதா ஹஸ்கர் அகில இந்திய எஸ்ஏஆர் ஜீலானி பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கினார். அதில் நானும் ஒரு உறுப்பினர். ஜீலானிக்கு ஆதரவாக வரும்படி ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பரப்புரை செய்தார்கள். புகழ்பெற்ற வழக்கறிஞர்களான ராம்ஜெத்மலானி, கேஜி கண்ணபிரான், விருந்தா குரோவர் ஆகியோர் அவருக்காக வாதாடினார்கள். அவர்கள் வழக்கின் உண்மை நிலையை தோலுரித்துக் காட்டினார்கள் – உருவாக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஊகங்கள், கருத்துக்கள், பச்சைப் பொய்கள் இவற்றின் தொகுப்புதான் வழக்கு என்பதை நிறுவினார்கள்.
ஆமாம், நீதித் துறையில் நியாயம் இருக்கிறது. ஆனால், அது நீதித் துறையின் இருட்டு அறைகளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு பயந்த சுபாவமுள்ள விலங்கு. அது எப்போதாவதுதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பெரிய வழக்கறிஞர்களின் குழுக்களால்தான் அதை தாஜா செய்து வெளியில் வரச் செய்து செயல்பட வைக்க முடிகிறது. இதுதான் பத்திரிகையாளர்களின் மொழியில் பிரம்ம பிரயத்தனம் என்று சொல்லப்படுவது. அப்படி ஒரு வலிமை முகமது அப்சலின் தரப்பில் வாதாட இருக்கவில்லை.
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 5 மாதங்களுக்குப் பிறகு காவல்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது வரை அவருக்கு சட்ட பாதுகாப்போ, ஆலோசனையோ கிடைக்கவில்லை. உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பெரிய வழக்கறிஞர்களோ, பாதுகாப்புக் குழுக்களோ, பிரச்சாரங்களோ இந்தியாவிலும் சரி காஷ்மீரிலும் சரி நடக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் அவர்தான் மிக பலவீனமானவர். அவர் மீதான வழக்கு ஜீலானி மீதான வழக்கை விட சிக்கலானது. குறிப்பாக, இந்தக் கால கட்டத்தில் அப்சலின் தம்பி ஹிலால் காஷ்மீரில் சிறப்பு நடவடிக்கை குழுவினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். (இந்த வழக்கின் விபரங்கள் அனைத்தும் வெளி வரும் போதுதான் புதிரின் இந்த பகுதி என்னவென்று புரிய வரும்).
புலன் விசாரணை அதிகாரியான காவல் துறை உதவி ஆணையர் ரஜ்பீர் சிங், டிசம்பர் 20, 2011 அன்று சட்ட விரோதமான நடவடிக்கையாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அவரால் ‘என்கவுண்டரில்’ கொல்லப்பட்ட ‘பயங்கரவாதிகளின்’ எண்ணிக்கையை போற்றும் விதமாக ‘தில்லியின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அவர். பத்திரிகையாளர்களின் முன்பு முகமது அப்சல் வாக்குமூலம் கொடுக்க வைக்கப்பட்டார். அப்சல் ஏற்கனவே காவல்துறையிடம் குற்றத்தை ஒத்துக் கொண்டதாக காவல் துறை துணை ஆணையர் அசோக் சாந்த் கூறினார். இதுவும் ஒரு பொய் என்று பின்னர் தெரிய வந்தது. காவல் துறையிடம் அப்சல் முறையாக வாக்குமூலம் அளித்தது அடுத்த நாள்தான் நடந்தது. (அதற்குப் பிறகும் அவர் சித்திரவதையின் அச்சுறுத்தலுடன் காவல் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார். இதுவும் சட்டப்படி தவறான நடைமுறை). அவரது பத்திரிகையாளர் ‘வாக்குமூலத்தில்’ நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தன்னைத் தானே முழுக்க முழுக்க தொடர்பு படுத்திக் கொண்டார் அப்சல்.
இந்த ‘ஊடக வாக்குமூலத்தின்’ நடுவில் ஒரு மர்மமான நிகழ்ச்சி நடந்தது. நேரடியான ஒரு கேள்விக்கு விடையாக, ஜீலானிக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் முற்றிலும் நிரபராதி என்று அப்சல் தெளிவாகச் சொன்னார். இந்த இடத்தில் உதவி ஆணையர் ரஜ்பீர் சிங் குரலை உயர்த்தி அவரைக் கடிந்து மவுனமாக்கி விட்டு, அப்சலின் வாக்குமூலத்தில் இந்தப் பகுதியை வெளியிடக் கூடாது என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அடி பணிந்தார்கள் பத்திரிகையாளர்கள்! இந்த நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் வந்தது.ஆஜ் தக் தொலைக்காட்சி இந்த வாக்குமூலத்தை ‘ஹம்லே கே சவ் தின்’ (தாக்குதலின் நூறு நாட்கள்) என்ற நிகழ்ச்சியில் மறு ஒளிபரப்பினார்கள். இந்த பகுதி எப்படியோ தப்பி வெளி வந்து விட்டிருந்தது. இதற்கிடையில் சட்டமோ, புலன் விசாரணை நடைமுறையோ தெரிந்திராத பொது மக்களைப் பொறுத்த வரை அப்சலின் வெளிப்படையான வாக்குமூலம் அவரது குற்றத்தை உறுதி செய்திருந்தது. ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் தீர்ப்பு’ என்னவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.
அப்சலின் வழக்கறிஞர் ஒரு முறை கூட சிறைக்குப் போய் அவரது கட்சிக்காரரின் கருத்துக்களை கேட்டுக் கொள்ளவில்லை. அப்சலுக்கு ஆதரவாக ஒரு சாட்சியத்தைக் கூட அவர் அழைக்கவில்லை. அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவே இல்லை.
‘ஊடக’ வாக்குமூலத்துக்கு அடுத்த நாள், அப்சலிடமிருந்து ‘அதிகாரபூர்வ’ வாக்குமூலம் கறக்கப்பட்டது. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட, உயர் தர ஆங்கிலத்தில் சரளமாக போகும் இந்த வாக்குமூலம் துணை ஆணையர் அசோக் சாந்திடம் சொல்லப்பட்டது. துணை ஆணையர் சொன்னது படி ‘அவர் சொல்லிக் கொண்டே போனார், நான் எழுதிக் கொண்டே இருந்தேன்’. இந்த வாக்குமூலம் சீலிடப்பட்ட உறையில் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குமூலத்தில், அரசுத் தரப்பின் அடிப்படையாக ஆகி விட்டிருந்த அப்சல் ஒரு பிரமாதமான திரைக்கதையை அளிக்கிறார். காசி பாபாவையும் மவுலானா மசூத் அசாரையும் தாரிக் என்பவரையும், இறந்து போன 5 பயங்கரவாதிகளையும், அவர்களது ஆயுதங்கள், கருவிகள், வெடிமருந்துகள், உள்துறை அமைச்சக அட்டைகள், மடிக்கணிகள், போலி அடையாள அட்டைகள் போன்றவற்றையும் இந்தக் கதை திறமையுடன் இணைக்கிறது. எந்த இடத்திலிருந்து எத்தனை கிலோ வெடிமருந்து வாங்கினார், வெடிகுண்டு செய்வதற்காக அவை எந்த விகிதத்தில் கலக்கப்பட்டன, எத்தனை தடவை அவரது மொபைலில் அழைப்புகள் வந்தன என்ற கணக்குகளை துல்லியமாக சொல்கிறார் அப்சல். (இதற்குள், முற்றிலும் மனம் மாறி ஜீலானியையும் சதியில் முழுமையாக சேர்த்துக் கொள்கிறார் அப்சல்).
‘வாக்குமூலத்தின்’ ஒவ்வொரு குறிப்பும் காவல்துறை ஏற்கனவே திரட்டியிருந்த சாட்சியங்களுடன் கச்சிதமாக பொருந்தி வந்தன. அப்சலின் வாக்குமூல அறிக்கை, காவல்துறை ஏற்கனவே பத்திரிகைகளுக்கு பல நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்த தகவல்களுடன் கச்சிதமாக பொருந்தின. சிந்தரெல்லாவின் பாதம் கண்ணாடி செருப்பில் பொருந்தியது போல. (இது ஒரு திரைப்படமாக இருந்தால், தனது தேவைக்கு ஏற்ப காட்சிகளை அமைத்துக் கொண்ட ஒரு திரைக்கதை என்று சொல்லலாம். பார்க்கப்போனால், அது ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டது என்று இப்போது நமக்குத் தெரியும். ஜீ டிவி அப்சலுக்கு ராயல்டி தொகை கொடுக்க வேண்டியிருக்கிறது).
கடைசியில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டுமே நடைமுறை விதிமீறல்களை சுட்டிக் காட்டி அப்சலின் வாக்குமூலத்தை தள்ளுபடி செய்தார்கள். ஆனால், அப்சலின் ஒப்புதல் வாக்குமூலம் இன்னமும் எப்படியோ, ஒரு ஆவியாக, அரசு தரப்பின் முக்கிய அடிப்படையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டப்படியும், நடைமுறை அடிப்படையிலும் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பு அந்த வாக்குமூலம் ஒரு கூடுதல் சட்ட நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டது. 2001, டிசம்பர் 21 அன்று இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது போர் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்த ‘மறுக்க முடியாத ஆதாரம்’ இருப்பதாக சொன்னது. பாகிஸ்தானின் பங்களிப்பு பற்றி அரசாங்கத்திடம் இருந்த ஒரே ஆதாரம் அப்சலின் வாக்குமூலம். அப்சலின் வாக்குமூலமும் ஸ்டிக்கர் அறிக்கையும்! சிந்தித்து பாருங்கள். சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட இந்த சட்ட விரோத வாக்குமூலத்தின் அடிப்படையில் லட்சக்கணக்கான படை வீரர்கள் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அனுப்பப்பட்டனர். அரசாங்கத்துக்கு பெரும் செலவு ஏற்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் துணைக்கண்டம் அணுஆயுத நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு முழு உலகமும் பணயக் கைதியாக வைக்கப்பட்டது.
கிசுகிசுக்கப்படும் ஒரு பெரிய கேள்வி: கொஞ்சம் மாத்தி இருக்குமோ? வாக்குமூலம் போரை ஏற்படுத்தியதா, போர் ஏற்படுத்த வேண்டிய தேவையிலிருந்து வாக்குமூலம் பிறந்ததா?
அப்சலின் வாக்குமூலம் மேல்மட்ட நீதி மன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட பிறகு, ஜெய்ஷ் – எ – முகமது, லஷ்கர் – எ – தொய்பா பற்றிய எல்லா பேச்சும் நின்று போனது. பாகிஸ்தானுடனான ஒரே இணைப்பு, இறந்து விட்ட தற்கொலைப்படையினரின் அடையாளம் மட்டுமே. இன்னமும் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த முகமது அப்சல் அவர்களை முகமது, ரானா, ராஜா, ஹம்சா, ஹைதர் என்று அடையாளம் சொன்னார். உள்துறை அமைச்சர் ‘அவர்கள் பாகிஸ்தானிகள் போலத் தோன்றுவதாக’ சொல்ல, காவல்துறை அவர்கள் பாகிஸ்தானிகள் என்று சொல்ல, விசாரணை நீதிமன்ற நீதிபதியும் அவர்கள் பாகிஸ்தானிகள் என்று சொன்னார். அத்தோடு அந்த விவகாரம் முடிந்து போனது. அவர்களது பெயர்கள் ஹேப்பி, பௌன்சி, லக்கி, ஜாலி மற்றும் கிடிங்காமனி என்றும் அவர்கள் ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டிருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்று நமக்கு இன்னும் தெரியாது. யாருக்காவது அதைப் பற்றி விசாரிக்க அக்கறை இருக்கிறதா? இருப்பது போலத் தெரியவில்லை. ‘இறந்து போனவர்களின் அடையாளம் இப்படியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டாலும், ஒன்றும் மாறி விடப் போவதில்லைதான். குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொல்லப்பட்ட 5 பேருடன் இருக்கும் தொடர்புதான் முக்கியம், அவர்களது பெயர்கள் என்னவாயிருந்தால் என்ன?’ என்று உயர்நீதிமன்றம் சொன்னது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தில் (இது நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது, காவல் துறை விசாரணையில் இல்லை) அப்சல், ‘நான்எந்த பயங்கரவாதியையும் அடையாளப்படுத்தவில்லை.பயங்கரவாதிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களை அடையாளப்படுத்தும்படி காவல்துறை என்னை கட்டாயப்படுத்தியது‘ என்று சொல்கிறார். ஆனால், அதற்குள் அவருக்குக் காலம் கடந்து விட்டது. வழக்கு விசாரணையின் முதல் நாள் விசாரணை நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், முறையான ஆதாரம் இல்லாமலேயே அப்சல் சொன்ன அடையாளத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் சாட்சியங்களாக ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார்! புரிந்து கொள்ள முடியாத இந்த நடவடிக்கை அப்சலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற தீர்ப்பிலிருந்து: ‘குற்றம் சாட்டப்பட்ட அப்சலுக்கு எதிரான முதன்மை சூழ்நிலை அவருக்கு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார் யார் என்று தெரிந்திருந்ததே ஆகும். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை அவர் அடையாளம் காட்டினார். இதைப் பொறுத்த வரை சாட்சியம் உடைக்கப்படாமல் இருக்கிறது’.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வெளிநாட்டு போராளிகளாக இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இல்லாமல் இருக்கவும் அதே அளவு சாத்தியம் இருக்கிறது. மக்களை கொன்ற பிறகு அவர்களை ‘வெளிநாட்டு தீவிரவாதிகள்’ என்று பொய்யாக அடையாளம் காட்டுவதோ, அல்லது இறந்து போனவர்களை ‘வெளிநாட்டு பயங்கரவாதிகள்’ என்று அடையாளம் காட்டுவதோ, அல்லது வாழ்பவர்களை பயங்கரவாதிகள் என்று அடையாளம் சொல்வதோ தில்லியின் தெருக்களில் அல்லது காஷ்மீரில் காவல் துறைக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் பழக்கமில்லாத ஒன்றில்லை.
காஷ்மீரில் பரவலாக பலமுறை பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளின் ஒன்றான சித்திசிங்புரா படுகொலைகளுக்குப் பிறகான கொலைகள். அது உலக அளவிலான பரபரப்பான விவகாரமாக உருவெடுத்தது. அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் புது தில்லிக்கு வருவதற்கு சற்று முன்பு ஏப்ரல் 20, 2000 இரவில் சித்திசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் இந்திய ராணுவ சீருடை அணிந்த ‘அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்தியவர்களால்’ கொல்லப்பட்டனர். (இந்திய பாதுகாப்புப் படைகள்தான் படுகொலைக்குக் காரணம் என்று காஷ்மீரில் பலர் சந்தேகப்பட்டார்கள்). ஐந்து நாட்களுக்குப் பிறகு பத்ரிபால் என்ற கிராமத்துக்கு வெளியில் எஸ்ஓஜியும் ராணுவத்தின் கிளர்ச்சி எதிர்ப்புப் பிரிவான 7வது ராஷ்டிரிய ரைபிள்சும் கூட்டு நடவடிக்கையில் 5 பேரை கொன்றார்கள். அந்த ஆட்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வெளிநாட்டுத் தீவிரவாதிகள் என்றும் அவர்கள்தான் சித்திசிங்புராவில் சீக்கியர்களைக் கொன்றவர்கள் என்றும் அடுத்த நாள் காலையில் அறிவித்தார்கள். உடல்கள் எரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்தன. (எரிக்கப்படாத) அவர்களது ராணுவ சீருடைகளுக்கு உள்ளே, சாதாரண சிவிலியன் உடைகள் இருந்தன. கடைசியில் அவர்கள் அனைவரும் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்கள் என்றும், சுற்றி வளைக்கப்பட்டு இரக்கமில்லாமல் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிய வந்தது
ஏப்ரல் 20, 2004 அன்று, லோலாப் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டிருந்த 18வது ராஷ்டிரீய ரைபிள்ஸ் படையினர், ஒரு கடும் சண்டையில் நான்கு வெளிநாட்டு போராளிகளைக் கொன்றதாக தெரிவித்தார்கள். அந்த நான்கு பேரும் ஜம்முவிலிருந்து வேலைக்கு அமர்த்தப்பட்டு குப்வாராவுக்கு ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட சாதாரண தொழிலாளர்கள் என்று பின்னர் தெரிய வந்தது. அனாமேதய கடிதம் ஒன்று தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் குப்வாராவுக்குப் போய் உடல்களை வெளியில் எடுக்க ஏற்பாடு செய்தார்கள்.
நவம்பர் 9, 2004 அன்று ராணுவம் ஜம்முவின் நக்ரோதாவில் 47 சரணடைந்த ‘போராளிகளை’ பத்திரிகையாளர்களுக்கு முன் காட்டியது. XVI படை அணியின் ஜெனரல் கமாண்டிங் ஆபிசரும் ஜம்மு காஷ்மீர் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீசும் உடன் இருந்தனர். அவர்களில் 27 பேர் வேலையில்லாத ஆட்கள் என்றும் போலி பெயர்களும் போலி அடையாளங்களும் கொடுக்கப்பட்டு, இந்த நாடகத்துக்கு ஒத்துழைத்தால் அரசு வேலை கிடைக்கும் என்று ஆசை காட்டப்பட்டவர்கள் என்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை பின்னர் கண்டறிந்தது.
வேறு சாட்சியங்கள் இல்லாத போது காவல்துறை சொல்வதை நம்ப முடியாது என்பதற்கு இவை எல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
விரைவு நீதிமன்றத்தில் விசாரணை மே 2002ல் ஆரம்பித்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற சூழலை நாம் மறந்து விடக் கூடாது. 9/11 தாக்குதல்கள் பற்றிய பரபரப்பு இன்னமும் ஓய்ந்திருக்கவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. குஜராத்தில் மத வன்முறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, சபர்மதி விரைவு ரயிலின் S-6 பெட்டி கொளுத்தப்பட்டு, 58 இந்து பயணிகள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். ‘பழிவாங்கும் விதமாக’ திட்டமிடப்பட்ட இனப் படுகொலையில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வெளிப்படையாக கொலை செய்யப்பட்டார்கள், 1,50,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டார்கள்.
எவை எல்லாம் அப்சலுக்கு எதிராக விரோதமாக போக முடியுமோ அவை எல்லாம் போயிருந்தன. உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை, தொழில்முறை வழக்கறிஞர் ஒருவரை நியமித்துக் கொள்ள பணமும் இருக்கவில்லை. வழக்கு விசாரணை மூன்றாவது வாரத்தை நுழைந்த போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரினார். அவரை எஸ்ஏஆர் ஜீலானியின் வழக்கில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பணி புரிய அமர்த்தியிருந்தார்கள். அனுபவம் இல்லாத அவரது ஜூனியர் வழக்கறிஞரை அப்சலுக்கு வாதாட நீதிமன்றம் நியமித்தது. அவர் ஒரு முறை கூட தனது கட்சிக்காரரை சந்திக்க சிறைச்சாலைக்குப் போகவில்லை. அப்சலின் சார்பில் ஒரு சாட்சியத்தைக் கூட அவர் அழைக்கவில்லை. அரசுத் தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ததாகவே சொல்ல முடியாது.
அவர் நியமிக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஜூலை 8 அன்று, அப்சல் இன்னொரு வழக்கறிஞரை நியமிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். அவருக்காக நியமிக்க விரும்பிய ஒரு சில வழக்கறிஞர்களின் பட்டியலையும் கொடுத்தார். அனைவருமே மறுத்து விட்டனர். (ஊடகங்களில் நடந்து கொண்டிருந்த பிரச்சாரத் தாக்குதலைப் பார்க்கும் போது அதில் ஆச்சரியம் எதுவும் இல்லைதான். வழக்கு விசாரணையில் பிறிதொரு கட்டத்தில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஜீலானியின் சார்பில் வாதிட ஒப்புக் கொண்ட போது சிவ்சேனா கும்பல் அவரது பம்பாய் அலுவலகத்தை சூறையாடியது). இதைப் பற்றி எதுவும் செய்ய முடியாத தனது இயலாமையை தெரிவித்த நீதிபதி, சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யும் உரிமையை அப்சலுக்கு அளித்தார்.
ஒரு சாதாரண மனிதன், கிரிமினல் வழக்கு விசாரணையில் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வார் என்று நீதிபதி எதிர்பார்த்தது ஆச்சரியத்துக்குரியது. குற்றச் சட்டங்கள் பற்றிய நுணுக்கமான அறிவு இல்லாத யாருக்கும் இது சாத்தியமில்லாத பணியாகவே இருக்கும். புதிதாக இயற்றப்பட்டுள்ள பொடா முதலிய சட்டங்கள், சாட்சியங்கள் சட்டம், டெலிகிராப் சட்டம் போன்றவற்றில் செய்யப்பட்ட மாற்றங்கள் இவை அனைத்தையும் புரிந்திருக்க வேண்டும். அனுபவம் நிறைந்த வழக்கறிஞர்கள் கூட கடுமையாக உழைத்துதான் தமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அப்சலுக்கு எதிரான வழக்கு கிட்டத்தட்ட 80 அரசுத் தரப்பு சாட்சியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. வீட்டு உரிமையாளர்கள், கடைக்காரர்கள், செல்போன் நிறுவன டெக்னீஷியன்கள் மற்றும் காவல் துறையினரும் இவற்றில் அடங்குவர்.
வழக்கின் சட்ட அடிப்படையை உருவாக்கும் முக்கியமான கட்டமாக இது அமைந்தது. இந்தக் கட்டத்தில் சாட்சியங்களை திரட்டி பதிவு செய்வது, எதிர்த் தரப்பு சாட்சியங்களை அழைப்பது, அரசுத் தரப்பு சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வது என்று கவனமான கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போனாலும் (பொதுவாக விசாரணை நீதிமன்றங்கள் மிகவும் கடுமையாக தீர்ப்பு சொல்பவை), பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தலாம். இவ்வளவு முக்கியமான கால கட்டத்தில் அப்சலுக்கு பாதுகாப்பு இல்லாமலேயே போனது. இந்தக் கட்டத்தில்தான் அவர் தரப்பு வழக்கு உடைந்து தூக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்க ஆரம்பித்தது.
எதிர்த் தரப்பில் இவ்வளவு குறைபாடுகள் இருந்தும், வழக்கு விசாரணையின் போதே, சிறப்பு புலனாய்வு பிரிவின் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. புலன் விசாரணையின் முதல் நாளிலிருந்தே பொய்கள், புரட்டுகள், போலி ஆவணங்கள், நடைமுறை பிறழ்வுகள் ஆரம்பித்து விட்டது மிகத் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. உயர் / உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இவற்றைச் சுட்டிக் காட்டினாலும், காவல் துறையை கண்டிக்கும் விதமான சொற்களை பயன்படுத்தியதோடு நின்று விட்டார்கள். ஓரிரு இடங்களில் இது ஒரு ‘கவலை தரும் போக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். நீதிமன்றங்களின் இந்தப் போக்கே கவலை தரக்கூடியதுதான். வழக்கு விசாரணையின் எந்தக் கட்டத்திலும் காவல் துறை கண்டிக்கப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு ஒவ்வொரு அடியிலும் சட்ட நடைமுறைகளை அலட்சியமாக புறக்கணித்திருந்தது. விசாரணை நடத்தப்பட்ட திமிரான போக்கு, என்ன செய்தாலும் ‘வெளியில் தெரிந்து விடப் போவதில்லை, அப்படித் தெரிந்தாலும் எதுவும் ஆகி விடாது’ என்ற கவலை தரும் நம்பிக்கையை காட்டியது. அந்த நம்பிக்கை வீண் போயிருக்கவில்லை.
புலன் விசாரணையின் ஒவ்வொரு பகுதியிலும் தடுமாற்றம் இருந்தது.
கைது மற்றும் கைப்பற்றல்களின் நேரத்தையும் இடத்தையும்எடுத்துக் கொள்வோம்:
ஜீலானி கைது செய்யப்பட்ட பிறகு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அப்சலும் சவுகத்தும் ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டார்கள் என்று தில்லி காவல் துறை சொன்னது. சவுகத்தையும் அப்சலையும் தேடும்படி தகவல் ஸ்ரீநகர் காவல்துறைக்கு அனுப்பப்பட்டது டிசம்பர் 15 காலை 5.45மணிக்கு என்று நீதிமன்ற பதிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், தில்லி காவல்துறையின் பதிவுகளின்படி ஜீலானி கைது செய்யப்பட்டது டிசம்பர் 15 காலை 10 மணிக்குத்தான், அதாவது அப்சலையும் சவுகத்தையும் ஸ்ரீநகரில் தேடும் முயற்சியை அவர்கள் துவங்கி நான்கு மணி நேரத்துக்குப் பிறகு. இந்த முரண்பாட்டை அவர்களால் விளக்க முடியவில்லை. காவல் துறையின் அறிக்கையில் ‘வெளிப்படையான முரண்பாடு’ இருப்பதாகவும் அது உண்மையாக இருக்க முடியாது என்றும் உயர் நீதி மன்ற தீர்ப்பு பதிவு செய்கிறது. அது ஒரு ‘கவலை தரும் போக்காக’ கடந்து செல்லப்படுகிறது. தில்லி காவல்துறை பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி கேட்கப்படாமலேயே போகிறது.

காவல் துறை ஒருவரை கைது செய்யும் போது, அந்த கைதுக்கு பொது பார்வையாளர் ஒருவர் இருக்க வேண்டும் என்று சட்டமுறைகள் விதிக்கின்றன. அந்தப் பார்வையாளர் கைது ஆவணத்திலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறி முதல் செய்யப்பட்ட பொருட்கள், பணம், ஆவணங்கள் போன்றவற்றை குறித்த கைப்பற்றல் ஆவணத்திலும் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்சலையும் சவுகத்தையும் டிசம்பர் 15 காலை 11 மணிக்கு ஸ்ரீநகரில் சேர்ந்து கைது செய்ததாக காவல் துறை சொல்கிறது. இந்த இரண்டு பேரும் தப்பி ஓடிக் கொண்டிருந்த டிரக்கை ‘கைப்பற்றியதாக’ சொல்கிறார்கள். (அந்த டிரக் சவுகத்தின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது). ஒரு நோக்கியா மொபைல் போன், ஒரு மடிக்கணினி, 10 லட்சம் ரூபாய் ஆகியவை அப்சலிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அப்சல், அவர் ஸ்ரீநகரின் பேருந்து நிலையம் ஒன்றில்தான் கைது செய்யப்பட்டதாகவும் எந்த மடிக்கணினி அல்லது மொபைல் போன் அல்லது பணம் அவரிடமிருந்து ‘கைப்பற்றப்படவில்லை’ என்றும் தனது குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கையில் சொல்லுகிறார்.
புரட்டல்தனமாக, அப்சல் மற்றும் சவுகத் இருவரின் கைது ஆவணங்களும் தில்லியில் கையொப்பமிடப்பட்டன. கையொப்பமிட்டவர், அந்த நேரத்தில் சட்ட விரோதமாக லோதி ரோட் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஜீலானியின் தம்பி பிஸ்மில்லா. போன், மடிக்கணினி மற்றும் 10 லட்ச ரூபாய் பறிமுதலுக்கான கைப்பற்றல் ஆவணத்தில் கையொப்பமிட்டிருந்த இருவரும் ஜம்மு கஷ்மீர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவரான தலைமை காவலர் முகமது அக்பர் (அரசுத் தரப்பு சாட்சி 62), அப்சலை முன்பின் தெரியாதவரோ, அந்த பக்கமாக போயக் கொண்டிருந்த ஏதோ ஒரு கிழ போலீஸ்காரரோ இல்லை என்பதை பின்னர் பார்க்கப் போகிறோம். ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஒப்புதல்படி பார்த்தாலும் அவர்கள் முதலில் அப்சலையும் சவுகத்தையும் பாரிம்புரா பழச் சந்தையில்தான் பார்த்தார்கள். ஏனோ தெரியவில்லை, அவர்களை அங்கேயே கைது செய்யவில்லை. பொது மக்கள் யாரும் பார்வையாளர்களாக இல்லாத ஒதுக்குப் புறமான இடத்துக்கு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
அரசுத் தரப்பு வழக்கில் இன்னொரு முக்கியமான முரண்பாடு இங்கு இருக்கிறது. ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நேரம் தெளிவாக பொய்த்துப் போகிறது’ என்று உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில் இதைப்பற்றிக் குறிப்பிடுகிறது. அதிர்ச்சியூட்டும் விதமாக இந்த சர்ச்சைக்குரிய கைது நிகழ்வின் போது அதே இடத்தில்தான் அப்சலுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மிக முக்கிய சாட்சியங்களான மொபைல் போன் மற்றும் மடிக்கணினியை கைப்பற்றியதாக காவல் துறை சொன்னது. கைது செய்யப்பட்ட நேரம் மற்றும் இடம், பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் மடிக்கணினி மற்றும் 10 லட்ச ரூபாய் இவற்றைப் பொறுத்த வரை காவல் துறையின் வார்த்தையைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. அதற்கு மறுப்பாக இருப்பது ‘பயங்கரவாதியின்’ வார்த்தை மட்டுமே.
கைப்பற்றுதல்கள் பற்றி தொடர்ச்சி:
போலி உள்துறை அமைச்சக பாஸ்கள், மற்றும் போலி அடையாள அட்டைகளை உருவாக்கிய கோப்புகள் பறிக்கப்பட்ட மடிக்கணினியில் இருந்ததாக காவல் துறை சொன்னது. வேறு எந்த உருப்படியான தகவலும் அதில் இல்லை. காசி பாபாவிடம் திருப்பித் தருவதற்காக அப்சல் அதை ஸ்ரீநகருக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார் என்று காவல் துறை சொன்னது. கணினியின் ஹார்ட் டிஸ்க் ஜனவரி 16, 2002 அன்று சீல் செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரி உதவி ஆணையர் ரஜ்பீர் சிங் சொன்னார். (அதாவது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு). அந்த தேதிக்குப் பிறகும் அந்தக் கணினி பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் கணினியில் இருந்தன.
நீதிமன்றம் இதை கருத்தில் எடுத்துக் கொண்டாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. (கொஞ்சம் அலசி பார்க்கும் போது, கணினியில் குற்றத்துக்கு ஆதாரங்களாக போலி பாஸ்கள் மற்றும் போலி அடையாள அட்டைகளை செய்ய பயன்படுத்திய கோப்புகள் மட்டும்தான் கண்டு பிடிக்கப்பட்டன என்பது கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கிறது? கூடவே நாடாளுமன்ற கட்டிடத்தைக் காட்டும் ஜீ தொலைக்காட்சி படத் துணுக்கு ஒன்று. மற்ற சாட்சிய தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தால் இவை மட்டும் எப்படி விட்டு வைக்கப்பட்டன? ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைமை இயக்குனர் காசி பாபாவுக்கு இவ்வளவு அவசரமாக ஒரு மடிக்கணி ஏன் தேவைப்பட்டது?)
மொபைல் போன் அழைப்பு பதிவுகளை எடுத்துக் கொள்வோம்:
கொஞ்சம் அதிகம் முறைத்துப் பார்த்தாலே, சிறப்பு புலனாய்வு குழுவின் ‘பக்கா சாட்சியங்கள்’ பல பல்லிளிக்க ஆரம்பித்து விடுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட மொபைல் போன்கள், சிம் அட்டைகள், கணினியில் கிடைத்த அழைப்பு பதிவுகள், செல்பேசி நிறுவன அதிகாரிகள் மற்றும் போன்களையும் சிம் அட்டைகளையும் அப்சலுக்கும் கூட்டாளிகளுக்கும் விற்ற கடைக்காரர்களின் வாக்குமூலங்கள் இவைதான் அரசுத் தரப்பு வழக்கின் முதுகெலும்பாக இருக்கின்றன. சவுகத், அப்சல், ஜீலானி மற்றும் முகமது (கொல்லப்பட்ட போராளிகளில் ஒருவர்) தாக்குதல் நடந்த நேரத்துக்கு சற்று முன்பு வரை ஒருவருடன் ஒருவர் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் உறுதி செய்யப்படாத கணினி பிரின்ட்அவுட்டுகள், முதன்மை ஆவணங்களின் நகல்கள் கூட இல்லை. அவை உரைக் கோப்புகளாக சேமிக்கப்பட்டிருந்த பில்லிங் கணினியிலிருந்து எடுக்கப்பட்டவை, எந்த நேரத்திலும் மாற்றப்பட்டிருக்கக் கூடியவை. எடுத்துக்காட்டாக, அழைப்புப் பதிவுகளின் படி, ஒரே எண்ணிலிருந்து இரண்டு அழைப்புகள் ஒரே நேரத்தில் செய்யப்பட்டிருந்தன. அந்த இரண்டு அழைப்புகளும் ஒரே நேரத்தில் ஒரே சிம் அட்டையிலிருந்து ஆனால், வெவ்வேறு ஐஎம்ஈஐ எண்கள் கொண்ட கருவிகளிலிருந்து வந்திருந்தன. ஒன்று போலி சிம் அட்டை தயாரிக்கப்பட்டது அல்லது அழைப்பு பதிவுகள் திருத்தப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது.
சிம் அட்டையைஎடுத்துக் கொள்வோம.
தான் சொல்லும் கதைக்கு ஆதாரமாக அரசுத் தரப்பு வெகுவாக நம்பியிருந்தது 9811489429 என்ற மொபைல் எண்ணைத்தான். அது அப்சலின் எண் என்று போலீஸ் சொல்கிறது. அப்சலை முகமதுவிடமும், அப்சலை சவுகத்திடமும், சவுகத்தை ஜீலானியுடனும் அந்த எண்தான் இணைத்தது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் கண்டறியப்பட்ட அடையாள அட்டையின் பின்பக்கம் இந்த எண் எழுதப்பட்டிருந்ததாக போலீஸ் சொல்கிறது. ரொம்ப வசதிதான். பூனைக்குட்டி தொலைந்து விட்டது! 9811489429 என்ற எண்ணில் அம்மாவை அழைக்கவும்!. (குற்றம் நடந்த இடத்தில் திரட்டப்பட்ட ஆதாரங்களை சீல் செய்து வைக்க வேண்டும் என்பது வழக்கமான சட்ட நடைமுறை என்பது இங்கு சொல்ல வேண்டும். இந்த அடையாள அட்டைகள் சீல் செய்யப்படவே செய்யாமல் காவல்துறை வசம் இருந்தன. அவை எந்த நேரத்திலும் மாற்றப்பட்டிருக்கலாம்.)
9811489429 உண்மையிலேயே அப்சலின் எண்தான் என்பதற்கு போலீசிடம் இருந்த உண்மையான ஆதாரம் அப்சலின் வாக்குமூலம் மட்டும்தான், அது ஒரு ஆதாரமே இல்லை என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். சிம் அட்டை கண்டுபிடிக்கப்படவேவில்லை. தான் அப்சலுக்கு ஒரு மோட்டரோலா போனையும் சிம் அட்டையையும் டிசம்பர் 4, 2001 அன்று விற்றதாக சொல்ல கமல் கிஷோர் என்ற அரசுத் தரப்பு சாட்சியத்தை காவல் துறை கொண்டு வந்தது. இருந்தும், குறிப்பிட்ட சிம் அட்டை நவம்பர் 6ஆம் தேதியிலிருந்தே பயன்பாட்டில் இருந்ததாக அரசுத் தரப்பு ஆதாரமாக வைத்திருந்த அழைப்பு பதிவுகள் தெரிவிக்கின்றன, அதாவது அப்சல் அதை வாங்கியதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாம். அந்த் சாட்சி பொய் சொல்கிறார் அல்லது அழைப்பு பதிவுகள் பொய்யானவை. கமல் கிஷோர் அப்சலுக்கு சிம் அட்டை விற்றதாகத்தான் சொன்னார், இந்த குறிப்பிட்ட சிம் அட்டையை விற்றதாகச் சொல்லவில்லை என்று சொல்லி உயர் நீதிமன்றம் இதை பூசி மெழுகிறது. ‘சிம் அட்டை 4.12.2001க்கு முன்பே நிச்சயமாக விற்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று உச்ச நீதி மன்றம் பெருந்தன்மையுடன் சொல்கிறது. அது அத்தோடு விடப்பட வேண்டியதுதான்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காட்டப்பட்டதை எடுத்துக்கொள்வோம்:
அப்சலுக்கு பல பொருட்களை விற்றதாக, பல கடைக்காரர்கள் அரசுத் தரப்பு சாட்சியங்களாக அடையாளம் காட்டினார்கள். அம்மோனியம் நைட்ரேட், அலுமினியம் பொடி, கந்தகம், ஒரு சுஜாதா மிக்சி, உலர் பழங்களின் பொதிகள் போன்றவற்றை விற்றார்களாம். வழக்கமான நெறிமுறைப்படி, இந்த கடைக்காரர்கள் மற்றவர்களின் மத்தியில் அப்சலை அடையாளம் காட்டும்படி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அது அப்படி நடக்கவில்லை. மாறாக, காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த அப்சல் காவல்துறையினரை ‘அழைத்துச்’ செல்லப்பட்டு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர் என்று இந்தக் கடைக்காரர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டார். (அந்த கடைகளுக்கு அவர் காவல்துறையினரை அழைத்துச் சென்றாரா, காவல் துறையினர் அவரை அழைத்துச் சென்றனரா என்று கேள்வி கேட்க நமக்கு உரிமை இருக்கிறதா? பார்க்கப் போனால், அவர் காவல்துறை பாதுகாப்பில் அவர்களின் சித்திரவதைக்கு ஆளாக்கப்படும் நிலைமையில் இருந்தார். அந்தச் சூழலில் அவரது வாக்குமூலம் சட்டப்படி ஏற்றுக் கொள்ள முடியாதது என்றால் இவற்றை எல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?)
இந்த நிர்வாக நடைமுறை பிறளல்களை விவாதித்த போதிலும் அவற்றை சீரியசாக நீதிபதிகள் எடுத்துக் கொள்ளவில்லை. சாதாரண குடிமக்கள் ஒரு அப்பாவியை குற்றவாளியாகக் காட்டுவதற்கு சிறப்புக் காரணம் இருக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். இந்த வழக்கு பற்றி ஊடக பிரச்சார கூத்துக்களுக்கு உட்படுத்தப்பட்ட பொதுமக்களிடம் இந்த வாதம் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியுமா? சாதாரண கடைக்காரர்கள், குறிப்பாக மின்னணு பொருட்களை கறுப்புச் சந்தையில் விற்கும் கடைக்காரர்கள் தில்லி போலீஸ்காரர்களுக்கு அடிபணிந்துதான் இருக்க வேண்டும் என்ற உண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் இந்த வாதம் செல்லுபடியாகுமா?
இது வரை நான் எழுதிய முரண்பாடுகள் எதுவுமே ஏதோ சிறப்பான துப்பறியும் வேலை மூலம் நான் கண்டுபிடித்தவரை இல்லை. இவற்றில் பல, நிர்மலாங்சு முகர்ஜி எழுதிய ‘டிசம்பர் 13, மக்களாட்சியின் மீது பயங்கரவாதம்’ என்ற புத்தகத்திலும், ‘ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்’ அமைப்பினால் வெளியிடப்பட்ட (தவறுகளின் விசாரணை மற்றும் மட்டுப்படுத்தும் செயல்பாடு) இரண்டு அறிக்கைகளிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எல்லாவற்றிலும் முக்கியமாக விசாரணை நீதிமன்றம், உயர் நீதி மன்றம், மற்றும் உச்ச நீதிமன்றம் கொடுத்த மூன்று பருமனான தீர்ப்புகளில் இந்த விவரங்கள் கிடைக்கின்றன. எல்லோருக்கும் கிடைக்கும் இந்த ஆவணங்கள் எனது மேசையில் இருக்கின்றன. இவ்வளவு குழப்பமான உலகம் ஒன்று வெளிப்படுத்தப்பட காத்திருக்கும் போது நமது தொலைக்காட்சி அலைவரிசைகள் அரைகுறை அறிவாளிகளையும், தத்தளிக்கும் அரசியல்வாதிகளையும் வைத்து வெற்று விவாதங்களை நடத்திக் கொண்டிருப்பது ஏன்? ஒரு சில தனியாக செயல்படும் ஆர்வலர்களைத் தவிர்த்து பெரும்பாலான செய்தித் தாள்கள் ஏன் தூக்கில் இடப் போகும் பணியைச் செய்பவர் யார், அப்சலைதூக்கிலிடப் பயன்படுத்தப்படவுள்ள தூக்குக் கயிறின் நீளம் (60மீட்டர்), எடை (3.75 கிலோ) போன்ற குரூரமான தகவல்களிலேயே கவனம் செலுத்தி முதல் பக்க செய்திகளாக வெளியிடுகின்றன? (இந்தியன்எக்ஸ்பிரஸ், அக்டோபர் 16, 2006). கொஞ்சம் நேரம் செலவழித்து பத்திரிகை சுதந்திரத்துக்கு வாழ்த்துப் பாடலாமா?
இதைச் செய்வது அவ்வளவு எளிதில்லை. ஆனால், உங்களால் முடிந்தால் ‘போலீஸ்னா நல்லவங்க, பயங்கரவாதிகள் கெட்டவங்க’ என்ற நம்பிக்கையிலிருந்து ஒரு சில நிமிடங்களுக்கு நம்மை விடுவித்துக் கொள்வோம். இந்த நம்பிக்கைகளிலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு ஆதாரங்கள் திகைப்பூட்டும் சாத்தியங்களை வெளிப்படுத்துகின்றன. நம்மில் பலர் பார்க்க விரும்பாத திசைகளில் அவை திருப்பி விடுகின்றன.
இந்த வழக்கு மொத்தத்திலும் மிகவும் ஒதுக்கப்பட்ட சட்ட ஆவணம் என்ற விருது குற்றம் சாட்டப்பட்ட முகமது அப்சல் குற்றச் சட்டப் பிரிவு 313ன் கீழ் அளித்த அறிக்கைக்குப் போகிறது. இந்த ஆவணத்தில் அவருக்கு எதிரான தடயங்களை, நீதிமன்றம் அவரிடம் கேள்வி வடிவில் தெரிவிக்கிறது. அவர் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். தன் சொந்த வார்த்தைகளில் நடந்ததை சொல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அப்சலைப் பொறுத்த வரையில், வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில் இந்த ஆவணம் அவரது குரலில் நடந்ததை சொல்கிறது.
இந்த ஆவணத்தில், அப்சல் அவருக்கெதிராக அரசுத் தரப்பு வைக்கும் சில குற்றச் சாட்டுகளை ஏற்றுக் கொள்கிறார். தாரிக் என்பவரை சந்தித்ததாகவும், தாரிக், முகமது என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும் ஒப்புக் கொள்கிறார். முகமது தில்லிக்கு வரவும், பழைய வெள்ளை அம்பாசடர் கார் ஒன்றை வாங்கவும் உதவி செய்ததாக ஒப்புக் கொள்கிறார். முகமது கொல்லப்பட்ட ஐந்து தற்கொலைப் படையினரில் ஒருவர் என்று ஒப்புக் கொள்கிறார். அப்சலின் குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கையில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் தன்னை முற்றிலும் குற்றம் செய்யாதவர் என்றோ, அப்பாவி என்றோ சொல்ல முயற்சிக்கவில்லை.
ஆனால், அவர் தனது செயல்கள் நடந்ததாக சொல்லும் சூழ்நிலை பயங்கரமானதாக இருக்கிறது. அப்சலின் அறிக்கை, நாடாளுமன்ற தாக்குதலில் அவர் ஆற்றிய வெளிவட்ட பங்கை விளக்குகிறது. ஆனால், புலன் விசாரணை ஏன் சொதப்பலாக நடந்தது, முக்கியமான கட்டங்களில் ஏன் மழுப்பலாகிப் போனது, இது எல்லாம் திறமையின்மை அல்லது தடுமாற்றத்தினால் மட்டுமே நடந்தன என்று விட்டு விடக்கூடாது என்பதற்கான பல காரணங்களை அவரது அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அப்சலை நாம் நம்பாமல் இருந்தாலும், வழக்கு விசாரணை, அதில் சிறப்பு புலனாய்வு பிரிவின் பங்கு பற்றி நமக்குத் தெரிந்ததை வைத்துப் பார்க்கும் போது, அப்சல் சுட்டிக் காட்டும் திசைகளில் தேடாமல் இருப்பது மன்னிக்க முடியாத ஒன்றாகும். இடங்கள், பெயர்கள், தேதிகள் என்று குறிப்பான தகவல்களை அவர் சொல்கிறார். (அவரது குடும்பத்தினர், சகோதரர்கள், மனைவி மற்றும் குழந்தை காஷ்மீரில் வசிக்கும் நிலையில், அவர் குறிப்பிடும் நபர்களால் எளிதாக தாக்கப்படக் கூடிய சூழ்நிலையில் அப்படிச் செய்வது அப்சலுக்கு எளிதானதாக இருந்திருக்க முடியாது).
அப்சலின் வார்த்தைகளில்:
’நான் ஜம்மு – காஷ்மீரின் சோப்பூரில் வசிக்கிறேன். 2000ஆம் ஆண்டில் நான் அங்கு இருந்த போது, ராணுவம் கிட்டத்தட்ட தினமும், வாரத்துக்கு ஒரு முறை என்னை தொந்தரவு செய்வது வழக்கம். போராளிகளைப் பற்றிய தகவல்களை அவருக்குத் தர வேண்டும் என்று ராஜா மோகன் ராய் என்பவர் என்னிடம் கேட்பார். நான் ஒரு சரண்டைந்த போராளி. எல்லா சரணடைந்த போராளிகளும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராணுவ முகாமில் பதிவு செய்ய வேண்டும். என்னை உடல் ரீதியாக சித்திரவதை செய்யவில்லை. அவர் என்ன மிரட்ட மட்டும்தான் செய்தார். என்னை பாதுகாத்துக் கொள்ள செய்தித் தாள்களிலிருந்து தெரிந்து கொண்ட சில தகவல்களை அவருக்கு நான் சொல்வேன்.
ஜூன்/ஜூலை 2000ல் நான் எனது கிராமத்திலிருந்து பாரமுல்லா நகரத்துக்கு குடிபெயர்ந்தேன். அறுவைச் சிகிச்சை கருவிகள் விற்பனைக்கான ஒரு கடை வைத்திருந்தேன். கமிஷன் அடிப்படையில் அதை நடத்தி வந்தேன். ஒரு நாள் நான் எனது ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருக்கும் போது S.T.F (மாநில செயல் படை) நபர்கள் வந்து என்னைப் பிடித்துச் சென்று ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து சித்திரவதை செய்தார்கள். நான் மீண்டும் போராளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக யாரோ எஸ்.டி.எப்.புக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். அந்த நபரை என் முன் கொண்டு வந்த பிறகு வெளியில் விட்டார்கள். அதன் பிறகு 25 நாட்கள் என்னை அவர்கள் பிடித்து வைத்திருந்தார்கள். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து என்னை நான் விடுவித்துக் கொண்டேன். (சிறப்புப் புலனாய்வு பிரிவினர் இந்த நிகழ்ச்சியை உறுதி செய்தார்கள்). அதன் பிறகு எனக்கு எஸ்.டி.எப். ஆல் ஒரு சான்றிதழ் தரப்பட்டது. ஆறு மாதங்களுக்கு என்னை சிறப்பு காவல் அதிகாரியாக ஆக்கினார்கள். அவர்கள் சார்பாக நான் வேலை செய்ய மாட்டேன் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தாரிக் என்னை பல்ஹலான் எஸ்டிஎப் முகாமில் நான் எஸ்டிஎப் காவலில் இருந்த போது சந்தித்தார். பின்னர் தாரிக் என்னை ஸ்ரீநகரில் சந்தித்த போது, தான் உண்மையில் எஸ்டிஎப்புக்கு வேலை செய்வதாகச் சொன்னார். நானும் எஸ்டிஎப்புக்கு வேலை செய்வதாக சொன்னேன்.
நாடாளுமன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட முகமது, தாரிக்குடன் இருந்தார். அவர் காஷ்மீரின் கேரன் பகுதியைச் சேர்ந்தவர் என்று தாரிக் என்னிடம் சொன்னார். முகமது தில்லியிலிருந்து வெளிநாட்டுக்கு போக வேண்டியிருப்பதால் அவரை நான் தில்லிக்கு அழைத்துப் போக வேண்டும் என்று சொன்னார். 15.12.2001 அன்று ஸ்ரீநகரில் என்னை போலீஸ் ஏன் பிடித்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்குப் போவதற்காக நான் ஸ்ரீ நகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறும் போது போலீஸ் என்னை பிடித்தது. என்னையும் சவுகத்தையும் ஸ்ரீநகரில் பிடித்ததாக வாக்குப் பதிவு செய்த சாட்சி அக்பர் டிசம்பர் 2001க்கு ஒரு ஆண்டு முனபு எனது கடையில் ரெய்டு நடத்தினார். போலி அறுவை சிகிச்சை கருவிகளை விற்பதாக சொல்லி 5000 ரூபாய் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டார். சிறப்புப் பிரிவில் நான் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டேன். பூப்சிங் என்பவர் என்னை மூத்திரம் குடிக்கும் படி கூட செய்தார். எஸ்ஏஆர் ஜீலானியின் குடும்பத்தை நான் பார்த்தேன். ஜீலானி மோசமான நிலையில் இருந்தார். அவரால் நிற்கக் கூட முடியவில்லை. பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். ஆனால், எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று மருத்துவரிடம் சொல்ல வேண்டும் இல்லை என்றால் மீண்டும் சித்திரவதை செய்யப்படுவோம் என்று மிரட்டப்பட்டோம்…’
இன்னும் சில தகவல்களை சொல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை அவர் கேட்டார்.
‘நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட முகமது என்னுடன் காஷ்மீரிலிருந்து வந்தார். அவரை என்னிடம் ஒப்படைத்தவர் தாரிக்தான். தாரிக் பாதுகாப்புப் படைகளுடனும் ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் எஸ்.டி.எப் உடனும் வேலை செய்பவர். முகமதுவால் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அவர் எனக்கு உதவி செய்வதாக தாரிக் சொன்னார். அவருக்கு பாதுகாப்புப் படைகளையும் எஸ்டிஎப்பையும் நன்கு தெரியும்… முகமதுவை தில்லியில் விட மட்டும் செய்தால் போதும் வேறு எதுவும் செய்ய வேண்டாம் என்று தாரிக் என்னிடம் சொன்னார். முகமதுவை தில்லிக்கு நான் அழைத்துப் போகாவிட்டால், நான் வேறு ஏதாவது வழக்கில் மாட்டி வைக்கப்படுவேன். இந்த சூழ்நிலையில் கட்டாயத்தின் கீழ் முகமதுவை நான் தில்லிக்கு அழைத்து வந்தேன். அவர் பயங்கரவாதி என்று எனக்குத் தெரியாது’.
முக்கியமான பாத்திரமான ஒருவரைப் பற்றிய விபரங்கள் இதன் மூலம் நமக்குத் தெரிய வருகின்றன. ‘சாட்சி அக்பர்’ (PW 62), முகமது அக்பர், தலைமை காவலர், பாரிம்பரா காவல் நிலையம். இவர்தான் அப்சல் கைது செய்யப்பட்ட ஆவணத்தில் கையொப்பமிட்ட ஜம்மு – காஷ்மீர் காவலர். அவரது உச்சநீதி மன்ற வழக்கறிஞர் சுசில்குமாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், வழக்கு விசாரணையின் போது நடந்த ஒரு அச்சமூட்டும் தருணத்தைப் பற்றி அப்சல் குறிப்பிடுகிறார். ஸ்ரீநகரிலிருந்து கைது ஆவணம் பற்றி சாட்சி சொல்ல வந்திருந்த சாட்சி அக்பர், நீதிமன்றத்தில் அப்சலை காஷ்மீரி மொழியில், ‘அவர் குடும்பம் நன்றாகத்தான் இருக்கு’ என்று ஆறுதல் அளித்தார். இது ஒரு மறைமுகமான மிரட்டல் என்பதை அப்சல் உடனடியாக புரிந்து கொண்டார். ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்ட பிறகு பாரிம்போரா காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடித்து உதைக்கப்பட்டதாகவும், அவர் ஒத்துழைக்காவிட்டால் அவரது மனைவியும் குடும்பமும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டார். (அப்சலின் சகோதரர் ஹிலால் சில மாதங்களுக்கு சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்று நாம் ஏற்கனவே பார்த்தோம்.)
இந்தக் கடிதத்தில், தான் எஸ்டிஎப் முகாமில் எப்படி சித்திரவதை செய்யப்பட்டோம் என்று அப்சல் விளக்குகிறார். பிறப்பு உறுப்புகளில் மின்முனைகளும், ஆசனவாயில் மிளகாய் மற்றும் பெட்ரோலும் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். துணைக் காவல் துறை மேலாளர் திராவிந்தர் சிங்கின் பெயரைக் குறிப்பிட்டு, தில்லியில் ஒரு ‘சின்ன வேலை’ முடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக குறிப்பிடுகிறார். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தொலைபேசி எண்கள் எஸ்டிஎப் முகாமுடன் தொடர்புடையவை என்று அவர் சொல்கிறார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய அறிவு நமக்கு அப்சலின் கதையின் மூலம் கிடைக்கிறது. பாதுகாப்புப் படைகள் போராளிகளுடன் சண்டை போடுவதும், அப்பாவி காஷ்மீரிகள் இடையில் மாட்டிக் கொள்வதும் என்று நாம் பத்திரிகைகளில் படிப்பவை நிகழ்வுகளின் அம்புலிமாமா வடிவம் மட்டும்தான். பெரியவர்களுக்கான வடிவத்தில், போராளிகள், தறுதலைகள், பாதுகாப்புப் படைகள், உளவாளிகள், துரோகிகள், ஏமாற்று வேலைக்காரர்கள், மிரட்டல்காரர்கள், பணம் பறிப்பவர்கள், இந்திய மற்றும் பாகிஸ்தானிய உளவு நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்கள், என்ஜிஓக்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவு கணக்கில் வராத பணமும் ஆயுதங்களும் காஷ்மீரில் கொட்டிக் கிடக்கின்றன.
பொது மக்களுக்கும் இவற்றுக்கிடையேயெல்லாம் இருக்கும் எல்லைகளை குறிக்கும் தெளிவான கோடுகள் இருப்பதில்லை. யார் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்று சொல்வது எளிதில்லை.
காஷ்மீரில் மற்ற எதையும் விட உண்மைதான் அபாயகரமானது. தோண்டத் தோண்ட மோசமான விபரங்கள் தெரிகின்றன. குழியின் அடியில் இருப்பவை அப்சல் சொல்லும் SOGயும் STFம். காஷ்மீரில் இருக்கும் இந்திய பாதுகாப்பு அமைப்பின் இரக்கமற்ற, ஒழுக்கமற்ற, அச்சமூட்டக் கூடிய பிரிவுகள் இவை. மற்ற முறையான பாதுகாப்புப் படைகளைப் போல் இல்லாமல், போலீஸ்காரர்கள், சரணடைந்த போராளிகள், ரவுடிகள் மற்றும் சாதாரண கிரிமினல்கள் கொடுக்கல் வாங்கல் செய்யும் ஒளி மங்கிய மண்டலத்தில் இந்தப் படையினர் செயல்படுகிறார்கள். அவர்கள் அந்த ஊர் மக்களை, குறிப்பாக கிராமப் புற மக்களை வேட்டையாடுகிறார்கள். அவர்களது முதன்மை இலக்கு, 1990களின் ஒழுங்கற்ற எழுச்சியில் கலந்து கொண்டு பின்னர் சரணடைந்து சாதாரண வாழ்க்கை வாழ முயற்சி செய்யும் ஆயிரக்கணக்கான காஷ்மீரி இளைஞர்கள்.
1989ல் அப்சல் எல்லையைக் கடந்து போராளியாக பயிற்சி எடுக்கப் போன போது அவருக்கு 20 வயதுதான் ஆகியிருந்தது. எந்தப் பயிற்சியும் கிடைக்காமல், கிடைத்த அனுபவத்தில் வெறுத்துப் போய் திரும்பி வந்திருந்தார். துப்பாக்கியை போட்டு விட்டு தில்லி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1993ல் நடைமுறையில் ஒருபோதும் போராளியாக இருந்திராத அவர் தானாக எல்லை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார். புரிந்து கொள்ள முடியாத படி, அந்த புள்ளியிலிருந்துதான் அவரது கொடுங்கனவுகள் ஆரம்பித்தன. அவரது சரணடைவு ஒரு குற்றமாகக் கருதப்பட்டு அவரது வாழ்க்கை நரகமாக மாறியது. சரணடைவது என்பது முட்டாள்தனம் மட்டுமில்லை பைத்தியக்காரத்தனம் என்ற பாடத்தை காஷ்மீரி இளைஞர்கள் அப்சலின் கதையிலிருந்து கற்றுக் கொண்டால், அவர்களை யார் குறை சொல்ல முடியும்? தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு இந்த அரசு அளிக்கும் பலவகையான கொடுமைகளை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பாமல் இருந்தால் என்ன தவறு?
முகமது அப்சலின் கதை காஷ்மீரிகளை கோபப்படுத்தியதற்கு காரணம் என்னவென்றால் அவரது கதை அவர்களது கதையாகும். அவருக்கு நிகழ்ந்தது, ஆயிரக்கணக்கான காஷ்மீரி ஆண்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நடந்திருக்க முடியும், நடக்கின்றன, நடந்திருக்கின்றன. ஒரே வேறுபாடு என்னவென்றால், அவர்களது கதைகள் கூட்டு விசாரணை மையங்களிலும், ராணுவ முகாம்களிலும், போலீஸ் ஸ்டேசன்களிலும் அவர்கள் சுடப்பட்டு, அடித்து துவைக்கப்பட்டு, மின்சாரம் செலுத்தப்பட்டு, பயமுறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பிறகு ஓடும் டிரக்குகளிலிருந்து வெளியில் எரியப்பட்ட பிறகு அந்த வழியாக போகிறவர்களால் கண்டறியப்படுவதன் மூலம் நிறைவேறுகின்றன. அப்சலின் கதையோ, பழங்கால நாடகம் போல தேசிய அரங்கில் முழு வெளிச்சத்தில், நியாயமான வழக்கு விசாரணை என்ற சட்டப் பாதுகாப்பின் கீழ், சுதந்திரமான ஊடக உரிமையுடன், ஜனநாயகம் என்று அழைக்கப்படும் அமைப்பின் எல்லா காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் மத்தியில் நடைபெற்றது.
அப்சல் தூக்கிலிடப்பட்டால், யார் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கினார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே போய் விடும். அது லஸ்கர் – எ – தொய்பாவா? ஜெய்ஷ் – எ – முகமதுவா? இல்லையென்றால் நாம் அனைவரும் நமக்கே உரிய பல்வேறு வகையான வழிகளில் அன்பிலும் வெறுப்பிலும் வாழும் இந்த நாட்டின் ரகசிய மனதுக்குள் ஆழமாக புதைந்திருக்கிறதா?
டிசம்பர் 13 நாடாளுமன்ற தாக்குதல் குறித்து ஒரு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிவது வரை, சோபோரில் வசிக்கும் அப்சலின் குடும்பம் பாதுகாக்கப்பட வேளண்டும். ஏனென்றால், அவர்கள் இந்த விசித்திர கதையின் பலவீனமான பிணைக்கைதிகள்.
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது எளிதில் மறந்து விட முடியாத ஒரு பிழையாக இருக்கும். அல்லது மன்னிக்க முடியாத ஒன்றாக! அப்படி ஆகி விடக் கூடாது!
நமது பொருளாதாரம் 10% வளர்ச்சியை சாதித்தாலும் அப்படி ஆவதை நியாயப்படுத்த முடியாது!
_______________________________________________________________
நன்றி ;செங்கொடி